Latest News

2 கட்டமாக தமிழக உள்ளாட்சித் தேர்தல்; அக். 17, 19-ல் வாக்குப் பதிவு! அக். 21-ல் வாக்கு எண்ணிக்கை!!

 
தமிழக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 21-ந் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான பதவி காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

அனைத்து மாநகராட்சிகளிலும் 919 வார்டுகள், நகராட்சிகளில் 3,613 வார்டுகள், பேரூராட்சிகளில் 8,288 வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகள், பஞ்சாயத்து யூனியன்களில் 6,471 வார்டுகள், கிராம பஞ்சாயத்து வார்டுகள் 99,324 என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன. இந்த முறை வார்டு கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மட்டும் நேரடித் தேர்தல் நடக்கிறது. மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் ஏற்கனவே நிறைவேறியது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு இடங்கள் எவை எவை என்ற பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தல்களுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார். தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.3-ந் தேதியாகும். 2 கட்டமாக பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 91,098 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். முதல் கட்டமாக அக்டோபர் 17-ந் தேதியன்று 10 மாநகராட்சிகளுக்கும் திண்டுக்கல், சென்னை மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 19-ந் தேதியன்று தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளன. இத்தேர்தலில் மொத்தம் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.