தமிழகத்தில் காலடி வைத்துள்ளார் சசிகலா புஷ்பா. ஆனால் தமக்கு எதுவும் நேரலாம் என்ற சூழ்நிலையை அசால்ட்டாக எதிர்கொள்ள கூடிய துணிச்சலோடுதான் அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியதை பார்க்க முடிந்தது. ஜெயலலிதா தம்மை அடித்தார் என்று ராஜ்யசபாவில் கதறிய பின்னர் தமிழகத்துக்குள் கால் வைக்கவே இல்லை சசிகலா புஷ்பா. ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் தமக்கு முன்ஜாமீனை வாங்கிவிட்டுத்தான் தமிழகத்துக்குள் நுழைவேன் என கூறிவந்தார் சசிகலா புஷ்பா.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றமோ, போலி முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருக்கிறீர்கள்.. அதனால் நேரில் ஆஜராக வேண்டும் என்று சசிகலா புஷ்பாவுக்கு உத்தரவிட்டது....இதனால் அவர் உச்சநீதிமன்றத்துக்கு போனார்.. ஒருவழியாக உச்சநீதிமன்றம் சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகவும் உத்தரவிட்டது. ஆனாலும் தமிழகம் வரும் சசிகலா புஷ்பா புதிய புகாரில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் சசிகலா புஷ்பா. எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தைரியமாகத்தான் அவர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடமும் கூட ஆணித்தரமாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் தம்முடைய கருத்துகளை வெளிப்படுத்தினார். சசிகலா விமான நிலையத்தில் பக்குவமாக நடந்து கொண்ட விதம்; செய்தியாளர்களிடம் தெளிவாகப் பேசியது உள்ளிட்டவையெல்லாம் அவர் 'ஒரு தலைவர் ரேஞ்சுக்கு' இருக்கிறாரே என்கிற அளவிலான பேச்சுகளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா புஷ்பா அரசியல் கட்சியைத் தொடங்கி தலைவரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அல்லது போட்டி அதிமுகவை தொடங்கினாலும் தொடங்கிவிடுவார் என்றே கூறப்படுகிறது.
No comments:
Post a Comment