தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இனியும் நடத்த முடியாது என்பதால் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்புவது என முடிவு செய்துள்ளாராம் ஜி.கே.வாசன். இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரையும் அணுகி சோனியாவை சந்திக்க அனுமதி பெற்றுத் தருமாறு போராடிக் கொண்டிருக்கிறாராம் ஜி.கே.வாசன். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட மோதலால் ஜி.கே.வாசன் ஓரம்கட்டப்பட்டார். பின்னர் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்தித்தது த.மா.கா.. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். த.மா.கா மூத்த துணைத் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், வேலூர் ஞானசேகரன், கோவை மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் அ.தி.மு.கவுக்கு தாவினர்.
வாசனுக்கு எதிர்ப்பு இதேபோல் மாவட்ட அளவிலும் ஏராளமான நிர்வாகிகள் அதிமுகவுக்கு தாவிவிட்டனர். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை திமுகவுடன் இணைந்து சந்திப்பதைத் தவிர வேறுவழியில்லாத நிலையில் இருக்கிறார் ஜி.கே.வாசன். ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காங்கிரஸில் சேர முடிவு இதனால் காங்கிரஸ் கட்சியிலேயே சேர்ந்துவிட்டால் எந்த பிரச்சனையும் வராது என்ற முடிவுக்கும் வந்துள்ளாராம் ஜி.கே.வாசன். அத்துடன் தற்போது தமிழக தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
திக்விஜய்சிங்குடன் சந்திப்பு இக்குழப்பமான சூழ்நிலையில் எப்படியாவது காங்கிரஸுக்குள் மீண்டும் சேர்ந்துவிடலாம் என நினைக்கிறாராம் வாசன். இதற்காக டெல்லி சென்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கை அவர் சந்தித்து பேசினார்.
கடுப்பில் ராகுல் இருப்பினும் வாசன் மீது ராகுல் கடும் அதிருப்தியில் இருப்பதால் வாசனின் எண்ணம் பலிக்குமா என தெரியவில்லை. தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைவதற்கான ஒரு பாதையை உருவாக்கவும் வாசன் போராடி வருகிறாராம்.
காங்கிரஸில் எதிர்ப்பு சோனியாவுக்காக தற்போது காத்திருக்கிறார் வாசன்.. .ஜி.கே.வாசனின் இந்த நகர்வுகளுக்கு காங்கிரஸில் இப்போதே எதிர்ப்பு கிளம்பி வழக்கம் போல புகார் பட்டியல் டெல்லிக்கு பறக்கத் தொடங்கிவிட்டது!


No comments:
Post a Comment