Latest News

பரபரக்கும் மதுரை.. ஆக. 29ல் கோர்ட்டுக்கு வரும்போது புதிய புகாரில் கைதாவாரா சசிகலா புஷ்பா?


உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சசிகலா புஷ்பா ஆஜராகும் போது புதிய புகாரில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமது வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்கள் இருவர் சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அது போலி முன்ஜாமீன் மனு; வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி மதுரையில் கையெழுத்திட்டதாக கூற முடியும்? என அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29-ந் தேதி சசிகலா புஷ்பா நேரில் ஆஜராகி விளக்கம் தர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சசிகலா புஷ்பாவை கைது செய்ய 6 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் சசிகலா புஷ்பா ஒரு எம்.பி... தப்பி ஓடிவிடமாட்டார் என்று கூறியதுடன் ஆகஸ்ட் 29-ந் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அவர் ஆஜராகவும் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆஜராக தமிழகம் வரும் சசிகலா புஷ்பாவை ஏற்கனவே உள்ள வழக்கில் போலீசார் கைது செய்ய முடியாதுதான். ஆனால் புதியதாக ஒரு புகாரின் பேரில் அவர் தமிழகத்தில் கால் வைத்த உடனேயே கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேநேரத்தில் இப்படியும் நடக்கலாம் என சசிகலா புஷ்பா தரப்பும் எதிர்பார்க்காமல் இருக்காது; அதற்கான முன்னெச்சரிக்கையுடன்தான் அவரும் தமிழகம் வரக் கூடும். இதனால் ஆகஸ்ட் 29-ந் தேதி பெரும் பரபரப்பு சம்பவங்கள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.