Latest News

பியூஸ் மனுஷூக்கு எதிராக ஒரு பெண்ணின் குரல்


சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷூக்கு எதிராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான பதில்களையும் பியூஸ் மனுஷின் ஆதரவாளர்கள் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், அண்மையில் மக்களுக்கு இடையூறான மேம்பால பணிகளை தடுத்து நிறுத்தியதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார் என அவரது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பியூஸ் மனுஷூக்கு ஆதரவாக குரல்கள் வலுவாக ஒலித்து வருகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றும் கிருபா முனுசாமி என்பவர் பியூஸ் மனுஷூக்கு எதிராக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பியூஷ் குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் தொடர்ந்து எழுதிவருவதை அமைதியாகவே கவனித்து கொண்டிருந்தேன். ஆனால், நண்பர் ஒருவர் இன்று வான்காரி மாத்தாய் எனும் மிகப்பெரும் சூழலிய போராளியோடு ஒப்பிட்டு எழுதியதை பார்த்து என் மௌனத்தை உடைக்க கடமைப்பட்டிருக்கேன்.

இன்று பியூஷ் மானுஷ் என்று பெயர் கொண்டுள்ளவரின் பழைய பெயர் பியூஸ் சேத்தியா! சேத்தியா என்றால் என்னவென்று யாரும் குழம்ப வேண்டாம், அது நீங்கள் யூகித்ததுப் போல அவரின் ஜாதி பெயர் தான். அவர் பெயர் மாற்றியதில் தவறில்லை. ஆனால், அந்த முற்போக்கு சிந்தனை ஆனந்த விகடனில் விளம்பரப்படுத்தப்பட்டதை தான் நான் 
கேள்விக்குட்படுத்துகிறேன். என் சொந்த ஊரான சேலத்தில் வசிப்பவர் தான் அவரும். அத்தோடு, நான் சட்டக் கல்லூரியில் படிக்கும் போது அவர் அலுவலகத்தில் சில மாதங்கள் பணிபுரிந்திருக்கிறேன். அவரை ஏதோ இந்த பூவுலகை காக்க வந்த பரமாத்மா போன்ற அளவில் பெரிதாக கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அப்படி என்ன செய்தார்? ஆமாம், சேலம் மூக்கன்னேரி என்னும் ஏரியை சீரமைத்ததாக பலரும் பாராட்டுகின்றனர். ஆனால், அதை அவர் மட்டும் செய்தாரா? பல நபர்களின் உழைப்பு பலனை, அவர் ஒருவர் மட்டும் அபகரித்துக் கொண்டார். மூங்கில் வீடுகள் செய்து வெள்ளத்தில் வீடிழந்தவர்களுக்கு அனுப்பி வைத்தார். சரி, அவருக்கு எங்கிருந்து அவ்வளவு மூங்கிலும் கிடைத்தது. நான் அறிந்து, என் கல்லூரிக் காலம் முதலே அவர் மூங்கில், மண்புழு வியாபாரம் செய்து வந்தார். அப்போதும் கூட, அவருக்கு மூங்கில்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

அதுமட்டுமல்லாது, நான் அவர் அலுவலகத்தில் பணியாற்றிய போதும் சரி, அதற்கு முன்னரும் சரி, ஒரு தகவல் அறியும் மனுவை கூட அவர் பெயரில் அனுப்ப மாட்டார். நான் இருந்தபோது, என் பெயரில் தான் அனுப்ப வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவார். காரில் வந்துப்போகும் சுகவாசி, நான் வேலைப் பார்த்தக் காலத்திற்கு ஊதியமும் தரவில்லை. ஏதேனும் போராட்டம் இருப்பின், கலந்துகொண்டு கைது என்று வரும்போது காணாமல் போய்விடுவார். இதுஎதுவும் அறியாது, அப்பாவியாக நானும் என் பெயரில் பலவற்றை எழுதி அனுப்ப, அவருடன் தொடர்பில் இருந்தவர்களும், என்னை அங்கே வேலைக்கு சேர்த்துவிட்டவரும் அதன் விளைவுகளை விவரித்து என்னை எச்சரித்தனர். இவையனைத்திற்கும் மேல், அவரிடம் வேலை பார்த்த அனைத்து பெண்களுக்கும், நான் உட்பட அவரின் நடத்தையின் மீது கண்டிப்பாக புகார் உண்டு. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஆந்தை மட்டும்தான் சாகும் வரையிலும் ஒரு ஆணோடு உறவு கொள்ளும், நாமெல்லாம் ஆந்தைகள் இல்லை என எனக்கு நாசுக்காக ஒரு கதை சொன்னார். அந்த கதை எதற்காக சொன்னார் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. இதற்குமேல், நான் எதுவும் கூறவும் விரும்பவில்லை. அவர் இப்போது கைது செய்யப்பட்டதும் கூட, இத்தனை காலமும் அடுத்தவர்களை மாட்டவிட்டு தப்பித்ததன் வினை என்றே கருதுகிறேன். ஒருவர் எப்படி ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு பேசிக் கொண்டு வீட்டில் எத்தனை கொடூரமான ஆணாக இருந்தாலும் அது அவரின் தனி விஷயம் என்பது போல அந்நபரின் ஆணாதிக்கம் இயல்பாக கடந்து செல்லப்படுகிறதோ, அதேபோல தான் இச்சம்பவத்திலும் நடக்கிறது. சூழலியலாளர் என்ற போர்வையில் ஒருவர் இயற்கையையும், பலரின் உழைப்பையும் சுரண்டலாம், ஆணாதிக்கத்தோடு பணிக்கு வரும் பெண்களிடம் எத்தனை மோசமாகவும் நடந்து கொள்ளலாம், ஏன் ஜாதிவெறியோடு கூட இருக்கலாம்.

ஏனெனில், இவை எதுவும் அறியாத ஒரு கூட்டம் சூழலியலாளர் என்ற ஒரே காரணத்திற்காக அந்நபரை வான்காரி மாத்தாயை விட பெரிய போராளி என பட்டம் சூட்டிக் கொண்டாடும். பியூஷை சூழலியலாளர் எனக் கொண்டாடும் அனைவருக்கும் என் கேள்வி இதுதான்: இயற்கையை சுரண்டி தன்னை வளர்த்துக்கொள்வதற்கு பெயர் பூவுலகின் மீதான நேசமா? இவ்வாறு கிருபா முனுசாமி பதிவிட்டுள்ளார். இதற்கு பியூஸ் மனுஷின் ஆதரவாளர் ஹெச்.வி. கிருஷ்ணபிரசாத் மிகக் கடுமையான பதில் ஒன்றையும் கிருபா முனுசாமியின் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.