Latest News

தென்சீனக் கடல் பகுதியில் சீனா உரிமை கோர முடியாது - சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு !


தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் இன்று அறிவித்துள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு தங்களை பாதிக்காது என சீனா புறக்கணித்துள்ளது. தெற்கு சீனக்கடல் பகுதியில் சுமார் 3.5 மில்லியன் சதுர கி.மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்தது. இந்த பகுதிகள் தங்களுக்குதான் என உரிமை கொண்டாடி வந்தது சீனா. ஆனால், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அந்நாடுகளும் இந்த பகுதியில் தங்களுக்கும் உரிமை கொண்டாடின.

இந்த பகுதியில் அதிகளவு எரிசக்தி ஆற்றல், கனிமவளங்கள், இயற்கை எரிவாயு, மீன் வளங்கள் இருப்பதால், இந்த பகுதியை கைப்பற்றுவதில் அந்நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அதேவேளையில், இந்த பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் அதே அளவு உரிமையை கோரி வருகின்றன. இதுதொடர்பாக, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம், தென்சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என அறிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு சீனாவின் ஆதிக்கத்துக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேவேளையில் இந்த தீர்ப்பை பிலிப்பைன்ஸ் வரவேற்றுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை சீனா உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ முடியாது என சீன அரசுக்கு சொந்தமான க்சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த தீர்ப்பின் விளைவாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதற்றம் அதிகரிக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.