Latest News

ஒரு கட்சி விடாமல் பலரிடமும் பேசினார் வாசன்.. போட்டு உடைக்கும் எஸ்.ஆர்.பி


அதிமுகவுடன் மட்டும் பேசாமல் பல கட்சிகளுடனும் கூட்டணி குறித்துப் பேசினார் ஜி.கே.வாசன். இதனால்தான் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி அடைந்து கூட்டணிக்கான கதவை மூடி விட்டார் என்று கூறியுள்ளார் மூத்த தமாகா தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். மேலும் தான் அதிமுகவில் சேரப் போவதாக வெளியாகியுள்ள செய்திக்கு, நான் சேரக் கூடாதா என்றும் அவர் கேட்டுள்ளார். இதன் மூலம் அவர் அதிமுகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஜி.கே.வாசன் கட்சியிலிருந்து பலரும் பிரிந்து மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்ப முயன்று வருகின்றனர். மறுபக்கம் எஸ்.ஆர்.பி, அதிமுகவுக்குப் போகவுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஏன் அதிமுகவுடன் தமாகா கூட்டணி அமையாமல் போனது என்பது குறித்து விவரித்துள்ளார் எஸ்.ஆர்.பி.

அவரது பேட்டியிலிருந்து... 

பாஜகவுடன் தமாகா தலைவர் ஒருவர் பேசினார். இதை என்னால் ஏற்க முடியவில்லை. அதேபோல மக்கள் நலக் கூட்டணி குறித்து வாசன் எங்களிடம் கருத்து கேட்டார். விஜயகாந்த் முதல்வர் வேட்பாளரா என்று நாங்கள் திருப்பிக் கேட்டோம். பிறகு மறுபடியும் அதிமுகவுடன் பேசலாம் என்றார். என்னையே பேசச் சொன்னார். ஆனால் அதற்குள்ளாகவே மக்கள் நலக் கூட்டணியை இறுதி செய்து விட்டார். முதலில் கொள்கை இருக்க வேண்டும். குறைந்தபட்ச கொள்கையாவது இருக்க வேண்டாமா என்று அவரிடம் கேட்டேன். ஆனால் நான் சொல்வதை கேட்கும் நிலையில் அவர் இல்லை. இதனால்தான் நான் அவரிடமிருந்து விலக முடிவு செய்தேன். கட்சி தொடங்கிய நாளிலிருந்து அதிமுகவோடு சேர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணமாக இருந்தது. விருப்ப மனு கொடுத்தவர்களில் 90 சதவீதம் பேர் அதிமுக கூட்டணி என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். திடீரென்று கடந்த 7ம் தேதி, அதிமுக அணி சரியாக வராது என்றார் வாசன். ஏன் என்று கேட்டபோது கூட்டணியில் இல்லை என்று மட்டும் கூறினார். விஜயகாந்த் குறித்து நான் கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. யாரோ எதையோ செய்து விட்டார்கள். அதனால்தான் விரும்பியபடி கூட்டணி அமையாமல் போய் விட்டது. ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் வாசன் பேசிக் கொண்டிருந்தார். அரசாங்கம் அதையெல்லாம் கவனிக்காமலா இருக்கும். உளவுத்துறை இருக்கிறது. கடைசி நேரத்தில் நடந்த விஷயங்கள் முதல்வருக்கு தெரிந்து விட்டது. அவர் உஷாராகி விட்டார். நான் முதல்வரைச் சந்திக்கவுள்ளேன். இந்த வாரத்திற்குள் சந்திக்க அழைப்பு வரலாம். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சி அதிமுகதான். அதில் சேருவதில் தவறும் இல்லை. மக்களின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளார் ஜெயலலிதா. அவரது இந்த ஐந்து ஆண்டு காலத்தில் மின் தடையே இல்லை. இதுவே பெரிய சாதனைதான் என்று கூறியுள்ளார் எஸ்.ஆர்.பி.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.