Latest News

மரணித்தும் இன்னும் வாழ்ந்து கொண்டுள்ள அதிரை சாமானியர்களை பற்றிய சிறுகுறிப்புகள்

பன்னூல் ஆசிரியரும் அதிரை வரலாற்றின் சாட்சியாளருமான அதிரை அஹ்மது காக்கா அவர்கள் 'அதிரை வரலாற்றில் நான் கண்ட நல்லவர்கள்' என எழுதி சும்மா கிடந்த நம்மையும் உசுப்பிவிட்டு எழுதக்காரணமாகி போனார்கள். அவர்களுடைய மேற்காணும் பதிவில் பின்னூட்டமாக எழுதியவற்றை சிற்சில மாற்றங்களுடன் தனிப்பதிவாக மீண்டும் தருகின்றோம்.

சாமானிய பெருந்தகைகள் பற்றிய நினைவு குறிப்புகள்:

1. நண்டுவெட்டி வெப்பல் என்கிற பெயரில் காடாக கிடந்த இடம் பிலால் நகராக உருமாறிய பிறகு அதாவது முஸ்லீம்கள் கணிசமாக குடியேற ஆரம்பித்த நிலையில் அங்கு ஒரு தொழுகை பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என தன் சக்திக்கு மீறிய கடும் முயற்சிகளை செய்து அல்லாஹ் உதவியால் சாதித்து காட்டியவர் (இடுப்புக்கட்டி குடும்பத்தை சேர்ந்த) மர்ஹூம் அபூபக்கர் காக்கா அவர்கள், இறுதியில் தான் உருவாக்கிய பள்ளியிலேயே புனித ரமலானில் அன்னாரின் உயிர்பிரிந்தது. இன்று கட்டப்பட்டுள்ள புதிய பிலால் பள்ளியை நிர்வகிப்பது அவர்களின் மருமகன் அஹமது கபீர் அவர்கள்.

2. பாவா என்கிற மர்ஹூம் முஸ்தபா அவர்கள், நமது முன்னோர்களுக்காக பல வருடங்கள் குத்பா பள்ளியில் குழி வெட்டியவர் மேலும் ரமலானுடைய காலங்களில் ஸஹருக்கு மக்களை எழுப்புவதற்காக பாட்டுப்பாடி தப்ஸ் அடித்து சேவையாற்றியவர். அவரது இறப்புக்குப்பின் குழி வெட்ட ஆள் கிடைக்காமல் அள்ளாடியபோது தான் அவரது தேவையையும் சேவையையும் உணர்ந்தோம். உணரும் வரை நமக்கு அவர் வெறும் பாவாவாகவே தெரிந்தார். 

இன்னொரு பாவா மர்ஹூம் இப்ராஹீம் அவர்களும் பாவா மர்ஹூம் முஸ்தபா அவர்களுடன் இணைந்து இணைபிரிய தோழர்களாக வலம் வருவார்கள். இருவரும் மாற்றி மாற்றி படிக்கும் பாடல்களுக்கு அப்போது நமக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும் குழிவெட்டும் உழைப்புக்கு அர்த்தம் தெரிந்தது.

இன்று குழிவெட்ட உ.பி. மாநிலத்திலிருந்து ஆட்களை தருவிக்கும் நிலைக்கு அதிரை ஆளாகியுள்ளதையும் சற்று நினைத்துப் பாருங்கள்.

3. மர்ஹூம் செய்யது முகமது அண்ணாவியார் மற்றும் மர்ஹூம் அகமது ஜலாலுதீன் காக்கா ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இன்னொரு பெருந்தகை மர்ஹூம் ஷரீப் அப்பா அவர்கள். 

ஷரீப் அப்பா அவர்களின் தரிப்பிடமாக மேலத்தெரு குத்பா பள்ளியே திகழ்ந்தது. மேலும் தன் பேரர்களான மீரா என்கிற சாகுல் ஹமீது (தற்போது சென்னையில் ஆசிரியராக பணிபுரிகிறார்) மற்றும் மவ்லவி அப்துல் மஜீத் (தற்போது மேலத்தெரு பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளியின் இமாமாக விரும்பி பணிபுரிகிறார், மேலும் இமாமத் செய்ய ஒரு குறிப்பிட்ட வகையினர் மட்டுமே வர வேண்டும் என்ற மாயையை உடைத்தவர், மக்தப் ஒன்றையும் கட்டணப் பள்ளிக்கூடங்களுக்கு ஈடான தரத்துடன் நடத்தி வருகிறார்) ஆகியோருக்கு தேவையான மார்க்கக் கல்வியை சிறப்பு கவனம் செலுத்தி ஊட்டி வளர்த்தவர்கள்.

4. மேலத்தெரு யூசுபாக்கா மளிகைக் கடையின் கணக்குப் பிள்ளையும், அவரின் மருமகனுமாயிருந்த முஹம்மது ஆலம் (மொம்மாலம்) அவர்கள் அண்மையில் இறந்தவர். மேலத்தெருவின் 'ஒளிவிளக்கு' என்று அவரைக் கூறலாம். கரண்டைக்கு மேல் கைலி, தலையில் தொப்பி, கனிவான பேச்சு, ஜும்மாப் பள்ளியில் நேரம் தவறாத ஜமாஅத்துத் தொழுகை, ஊரில் எல்லாத் தெருவாசிகளுடனும் நட்புறவு, இப்படி ஒரு முன்னுதாரண வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த அந்த 'மொம்மாலம்' காக்காவை மறக்கத்தான் முடியுமோ? (குறிப்பு: இந்த பின்னூட்டத்தை எழுதியவர் அதிரை அஹமது காக்கா அவர்கள்.)

S. அப்துல் காதர் & அதிரை அமீன் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.