Latest News

தனித்துப் போட்டியில்லை... கட்சிக்குள் இருந்தே ஈவிகேஎஸ்ஸை எதிர்கொள்வேன்... ஜோதிமணி அதிரடி!


அரவக்குறிச்சியில் நான் சுயேட்சையாக நிற்கப் போவதில்லை. கட்சிக்குள் இருந்து கொண்டே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்கொள்வேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தனக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் கடந்த ஒருவருடமாக அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி. ஆனால், தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கை கோர்த்துள்ள காங்கிரஸ், கட்சிக்கு அந்தத் தொகுதி கிடைக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதியில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இந்த விவகாரம் காங்கிரஸில் உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தியது. ஜோதிமணி ராகுல் காந்தியின் அன்பையும், மதிப்பையும் பெற்றவர் என்பதால் இளங்கோவன் தரப்பால் ஜோதிமணிக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை. அமைதி காத்தனர். இந்நிலையில், தனித்துப் போட்டியிடும் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் ஜோதிமணி. இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், "கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நான் சுயேட்சையாக நிற்கப்போவதில்லை. அதே சமயம், அரவக்குறிச்சியில் திமுக - காங்கிரஸ் வெற்றி பெற பணி செய்ய மாட்டோம். இரண்டாம் கட்ட தலைவர்களை இளங்கோவன் நசுக்கப் பார்க்கிறார். கட்சிக்குள் இருந்துகொண்டே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்கொள்வேன்'' என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அரவக்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டி, முக்கிய ஆலோசனையை ஜோதிமணி நடத்தியிருந்தார். அதன் பின்னரே இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.