சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது எனக்கே தெரியாது என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். கட்சித்தலைமையின் முடிவுக்கு தான் கட்டுப்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்பமனு பெற்றிருந்தாலும், 41 தொகுதியில் யாருக்கு சீட் கொடுப்பது, என்பது காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு சற்றே சிரமமான காரியம்தான்.
கட்சியில் போட்டியிட விரும்பி ஏற்கனவே விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே இம்முறை தொகுதிகள் ஒதுக்கப்படும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். டெல்லி மேலிடத்தின் ஒப்புதல் இல்லாமல் இளங்கோவன் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிக்க முடியாது. அதனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி தலைவர்கள் அவர்களுக்கு டெல்லியில் பரிச்சயமான மேலிட நிர்வாகிகளை அணுகி அவரவர் ஆதரவாளர்களுக்கு தொகுதி பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ப.சிதம்பரம் அவரது ஆதரவாளர்களுக்காக 8 தொகுதிகளை கேட்டு அகில இந்திய நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். திருச்சி கிழக்கு, முசிறி, சிவகங்கை, திருமயம், கடலூர், கோவை மாநகரில் ஒரு தொகுதி, சென்னையில் 2 தொகுதிகள் என 8 தொகுதிகளை கேட்டுள்ளார். முன்னாள் தலைவர் தங்கபாலு 8 லிருந்து 10 தொகுதிகள் தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளாராம். முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி அவரது மகன் விஷ்ணு பிரசாத்துக்காக செய்யாறு தொகுதியை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளாராம். வசந்தகுமார் தனக்கும் தனது ஆதரவாளர் ஒருவருக்கும் தொகுதி ஒதுக்கித் தர வேண்டும் என மேலிடத்தில் அணுகியுள்ளாராம். இதனிடையே வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சார வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த குஷ்புவிடம், சட்டசபைத் தேர்தல் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குஷ்பு, நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. காங்கிரஸ் கட்சித்தலைவி அன்னை சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, தன்மானத்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார். காங்கிரஸ் கட்சித்தவிர வேறு எந்த கட்சியிலும் யாரும் தியாகம் செய்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறினார். தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, தமிழக மக்களிடம் உண்மையைச் சொல்லி பிரச்சாரம் செய்வோம் என்று கூறியுள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு போட்டியிட்டால் அரவக்குறிச்சி தொகுதியை ஜோதிமணிக்கு ஒதுக்க வேண்டும் என்று கலகக்குரல் எழுந்துள்ள நிலையில் குஷ்பு போட்டியிடுவாரா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.


No comments:
Post a Comment