Latest News

யாரு பின்னாடியும் போய் ஏமாந்துறாதீங்க... அதிருப்தியாளர்களிடம் போனில் பேசி மனதை கரைத்த விஜயகாந்த்

 
 அதிமுக ஆசை வார்த்தைக் கூறியதால் அவர்கள் பின்னால் சென்ற 9 பேரில் 7 பேர் நிலை என்னவானது என்பது உங்களுக்குத் தெரியும், எனவே யார் பின்னாலும் சென்று ஏமாற வேண்டாம் என்று அதிருப்தி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் பேசியது அவர்களின் மனதை மாற்றியுள்ளதாம். இதனால் போட்டி பொதுக்குழு கூட்ட முடியாமல் சந்திரகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தேமுதிக விலக வேண்டும் என்று தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 4 மாவட்ட செயலாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கினர். இதனால் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

தங்களை கட்சியை விட்டு நீக்கியது செல்லாது என்று சந்திரகுமார்அணி கூறி வருகிறது. தேமுதிகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை ஒன்று திரட்டி தனது அடுத்த முடிவை அறிவிக்கவுள்ளதாக சந்திரகுமார் கூறினார். இதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார். எனவே, அதிருப்தி நிர்வாகிகளை கூட்டி போட்டி பொதுக்குழுவை சந்திரகுமார் அணி நடத்தவுள்ளதாகவும், தாங்கள் தான் தேமுதிக என்றும், விஜயகாந்துக்காக தலைமை பதவியை விட்டு வைக்க திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்த விஜயகாந்த், கடந்த 6ம் தேதியன்று தேமுதிகவின் 57 மாவட்ட செயலாளர்களையும், பொதுக்குழு உறுப்பினர்களையும் போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். ரசிகர் மன்றத்தில் இருந்த உங்களை இன்றைக்கு மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. ஆக்கியுள்ளேன். உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது எப்படி என்று எனக்கு தெரியும். அதிமுக ஆசை வார்த்தைக் கூறியதால் அவர்கள் பின்னால் சென்ற 9 பேரில் 7 பேர் நிலை என்னவானது என்பதை நன்றாக அறிவீர்கள். ஆகவே, யார் பின்னாலும் சென்று ஏமாற வேண்டாம் என்று பேசினாராம். விஜயகாந்தின் இந்த பேச்சு நிர்வாகிகள் பலரை மனமாற வைத்துள்ளதாம். அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் பலர் தாங்கள் தேமுதிகவிலேயே இருப்போம் என்று விஜயகாந்திடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. சந்திரகுமார் தரப்புடன் தொடர்பில் இருந்த பலர் தற்போது அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுவிட்டனர். இதனால் போட்டி பொதுக்குழு திட்டத்தை சந்திர குமார் கைவிட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கருத்து கூறிய சந்திரகுமார், பொதுக்குழுவை கூட்டுகிற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. அதிருப்தி நிர்வாகிகளை வரும் 10ம் தேதி கூட்டி ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். சந்திரகுமார் அணியினர் திட்டமிட்டபடி சென்னை தி.நகரில் கூட்டம் நடக்குமா? சந்திரகுமார் பின்னால் எத்தனை பேர் செல்வார்கள் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.