தேசிய புலனாய்வு கழகத்தின் அதிகாரி தன்ஜில் அகமது கொலையில் உத்தர பிரதேச போலீசார் இன்று 2 பேரை கைது செய்துள்ளனர்.
உறவினர்களுக்கு இடையேயான சொத்து விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளது என போலீசார் கூறுகின்றனர். இது பற்றி ஐ.ஜி. விஜய் குமார் மீனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, கடந்த ஏப்ரல் 2ந்தேதி நள்ளிரவில் உறவினர் ஒருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அகமது காரில் திரும்பி கொண்டு இருந்துள்ளார்.
அவர்களை 3 பேர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சஹஸ்பூர் கிராமத்தில் அகமதுவின் வாகனத்தை முந்தி சென்ற அவர்களில் ஒருவரான முனீர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 21 முறை சுட்டதில் சம்பவ இடத்திலேயே அகமது பலியாகி உள்ளார். அவரது மனைவி கடுமையாக காயம் அடைந்துள்ளார்.
ஆனால் அவரது 2 குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பினர். குடுமப விவகாரம் மற்றும் சொத்து பிரச்னையில் இச்சம்பவம் நடந்துள்ளது என ஐ.ஜி. மீனா கூறியுள்ளார். இச்சம்பவத்தில் அகமதுவின் சகோதரர் முறையிலான உறவுக்காரர் ரேஹனின் மருமகன் மற்றும் அவனது கூட்டாளி ஜெய்னுல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முனீர் போலீசாரால் கைது செய்யப்படுவார் என ஐ.ஜி. மீனா கூறியுள்ளார்.
முனீரை கைது செய்வதற்கு உதவுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என டி.ஜி.பி. ஜாவீத் அகமது அறிவித்துள்ளார்.


No comments:
Post a Comment