Latest News

திமுக-தேமுதிக கூட்டணி பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது: கருணாநிதி


திமுக கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக சேரும் என்று இன்னமும் நம்பிக்கையுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நடைபெற்று வந்த நேர்காணல் இன்று முடிவடைந்தது. நேர்காணல் முடிந்ததும், அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி இதுகுறித்து கூறியது:

பிப்ரவரி 22 முதல் 27ம் தேதிவரை மற்றும் மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி (இன்று) வரை மொத்தம் 12 நாட்கள் நேர்காணல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருக்கும் 4,362 பேரும், புதுவை - காரைக்காலில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விண்ணப்பித்திருக்கும் 71 பேரும் ஆக மொத்தம் 4,433 பேர் நேர்காணலில் கலந்து கொண்டார்கள். விண்ணப்பப் படிவங்கள் மொத்தம் 6,366 விற்பனை ஆன வகையில் 63 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயும், 5,661 பேர் விண்ணப்பக் கட்டணமாக செலுத்திய வகையில் மொத்தம் ரூ.12 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் தலைமைக் கழகத்திற்கு செலுத்தப்பட்டிருக்கிறது என்றார். விஜயகாந்த்தின் தேமுதிக, திமுகவோடு கூட்டணி வைக்கும் என்று இன்னும் நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு, திமுகவோடு, தேமுதிக கூட்டணி அமைக்கும் என்று இன்னும் நம்புகிறேன். திமுக-தேமுதிக கூட்டணி பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பதை கூற முடியாது என்றார். தேமுதிக கூட்டணி முடிவாவதில் ஏன் இந்த தாமதம்? இழுபறிக்கு என்ன காரணம்? அவர்களுடைய கோரிக்கை என்ன? என்ற கேள்விக்கு, பதிலளித்த, கருணாநிதி, இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார். திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்று நிச்சயம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். வேறு எந்தக் கட்சிகளுக்காவது கூட்டணியில் சேர அழைப்பு விடுத்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, வேறு எந்த கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று கருணாநிதி பதிலளித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.