மக்கள் நலகூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது. தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரிலேயே போட்டியிடுவோம் என அக்கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலையொட்டி, மக்கள் நலக்கூட்டணி, தேமுதிகவுடன் இணைந்துள்ளது. இக்கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அன்று, இப்புதிய கூட்டணிக்கு விஜயகாந்த் அணி என வைகோ பெயரிட்டார்.
ஆனால், அப்படியெல்லாம் அழைக்க முடியாது என மூத்த தலைவர் நல்லகண்ணு கூறிவிட்டார். ஆனால், கிராமங்களில் விஜயகாந்த் அணி என்று சொன்னால் தான் புரியும் என பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மக்கள்நலக்கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ‘மக்கள் நல கூட்டணியை விஜயகாந்த் அணி என்று அழைக்க முடியாது. தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுவோம்' என்றார். இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடும் என தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment