தங்கள் கூட்டணிக்கு தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என்றே பெயர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜயகாந்த்துடன் கூட்டணி வைத்த வேகத்தில் அந்தப் பெயரை தூக்கிப் போட்டு விட்டார் வைகோ.
இந்தக் கூட்டணிக்கு விஜயகாந்த் அணி என வைகோ தன்னிச்சையாக அறிவித்தார். இதனால் அந்தக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. மூத்த தலைவர் நல்லகண்ணு, அதெல்லாம் கேப்டன் கூட்டணி என்றெல்லாம் அழைக்க முடியாது என்று கூறி விட்டார். ஆனால் பிரேமலதா விஜயகாந்த்தோ, அப்படிக் கூப்பிடுவதால் என்ன தப்பு. கிராமத்தில் உள்ளவர்களுக்கு கேப்டன் கூட்டணி என்று சொன்னால்தன் புரியும் என்று கூறி நல்லகண்ணுவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களில் ஒருவரான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள புதிய கூட்டணிக்கு தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என்றே பெயர். ஆனால் இதனை விஜயகாந்த் அணி என அழைப்பதில் யாருக்கும் கவுரவப் பிரச்சினை இல்லை. மார்ச் 31க்குள் மக்கள் நலக்கூட்டணி தொகுதிப் பங்கீடு பற்றி இறுதி வரையறை செய்யப்படும். தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து அப்போது தெரியவரும்' என்றார்.
No comments:
Post a Comment