Latest News

  

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதிக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்பு தொடர்பான வாதம் தொடக்கம்


ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் தயாநிதி, கலாநிதி மாறன், கலாநிதி மாறன் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடர்பான வாதங்கள் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் தொடங்கியது. அப்போது தயாநிதி, கலாநிதி உள்ளிட்டோருக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு சமர்ப்பித்தது. இவ்வழக்கின் விசாரணை வரும் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரது நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக 2011-இல் சிவசங்கரன் சிபிஐயிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2013-ல் சிபிஐ வழக்குத் தொடுத்தது. ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இதன் மூலம் தனது அதிகாரத்தை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஏர்செல்- மேக்சிஸ் பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகையை அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்திருந்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கலாநிதி மாறன் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை தொடர்பான வாதம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் மட்டா, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை வாதங்கள் வரும் 6-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி, ஷைனி தெரிவித்தார். வரும் 6-ந் தேதியன்று இருதரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டால் குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்த முடிவை நீதிபதி ஷைனி தெரிவிப்பார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.