பூரண கும்பத்துடன் பெண்கள் காத்திருக்க... ஒரு பக்கம் செண்டை மேளம் முழங்க... சென்னை ராயப்பேட்டையே விழாக்கோலம் பூண்டது. ஆளும் கட்சியாக இருந்தாலும் எப்போது அமைதியாக காணப்படும் அதிமுக தலைமை அலுவலகம் இன்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. காலை முதலே ராயப்பேட்டையில் தொண்டர்கள் குவிந்து வந்தனர். ஏன் இந்த திடீர் பரபரப்பு என்று பொதுமக்கள் யோசிக்கவே, முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வருகையே ராயப்பேட்டையை விழாக்கோலமாக மாற்றியது. போயஸ்கார்டனை விட்டு ஜெயலலிதா வருகிறார் என்றாலே அது தலைமைச் செயலகம் செல்லத்தான் என்று தெரியும், ஆனால் டிசம்பர் 24ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு தினத்தன்று மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. அப்போதும் பிரம்மாண்ட கூட்டம் திரண்டது. டிசம்பர் 31ம் தேதியன்று கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போதும் தொண்டர்கள் தென் சென்னையை அலற வைத்தனர். இன்றும் அப்படித்தான் கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஜெயலலிதா வரப்போகிறார் என்று தகவல் பரவியதும் உடனே தொண்டர்கள் குவிந்து விட்டனர். அதிமுகவினரின் அட்ராசிட்டியால் ராயப்பேட்டை பகுதியே இன்று திக்குமுக்காடித்தான் போனது.
மகளிரின் பூரண கும்பம் கோவில் வாசலில் காத்திருப்பது போல அதிமுக மகளிர் அணியினர் வரிசையாக பூரண கும்பங்களை வைத்துக்கொண்டு கட்சி வாசலில் காலை முதலே காத்திருந்தனர்.
என்னா ஒரு வரவேற்பு கட்சி அலுவவக வாசலில் ப்ளெக்ஸ் பேனர்கள் குறைவாகவே காணப்பட்டது. எல்லாம் தலைமையின் கட்டுப்பாடுதானாம். கோவில் திருவிழா போல செண்டை மேளங்கள் முழங்கின. ஜெயலலிதாவின் வாகனம் ராயப்பேட்டை பகுதிக்குள் வரவே, தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
மாடத்தில் தரிசனம் 6 மாவட்ட கட்சி அலுவலகங்களை திறந்து வைத்த ஜெயலலிதா, எழுச்சியுரைக்குப் பின்னர் மிக மெதுவாக நடந்து வந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இரண்டு விரலை காட்டி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
கட்சித்தலைவரின் வருகைக்கு கொண்டாட்டமா? தமிழகத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களின் கட்சி அலுவலகங்களுக்கு தினசரி சென்று கொண்டுதான் இருக்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதி, தினசரி அண்ணா அறிவாலயம் சென்று கட்சிப்பணியாற்றுகிறார் தொண்டர்களையும், செய்தியாளர்களையும் சந்திக்கிறார். ஆனால் ஜெயலலிதா கட்சித்தலைமை அலுவலகத்திற்கு அத்திப்பூத்தார் போலத்தான் வருகிறார் எனவேதான் ஜெயலலிதாவின் வருகையை விழா போல கொண்டாடுகின்றனர்.
நீங்க நடத்துங்கப்பு அதிமுகவினருக்கு ஜெயலலிதாதான் தெய்வம்... அவர் வார்த்தையே வேதம்... ஜெ உட்கார்ந்தால் உற்சவம்...நின்னா தேரு... நடந்தா ஊர்வலம்தான்... என்னமோ போங்க... உங்க ஆட்சி நடக்குது... நீங்க இதுவும் நடத்துவீங்க இதுக்கு மேலயும் நடத்துவீங்கப்பு




No comments:
Post a Comment