Latest News

திமுக- தேமுதிக - காங். கூட்டணி கன்பார்ம்... வைகோ அணி உடையுது... பகிரங்கப்படுத்திய காங். கோபண்ணா!!


தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ் இணையக் கூடும்; வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி உடைந்து அதிலிருந்து சில கட்சிகளும் திமுக அணியில் இணையலாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் கோபண்ணா வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் விறுவிறுப்பான வியூகத்துடன் களமிறங்கி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தேமுதிகவை வளைத்துப் போடுவதில் பாஜக மிகவும் தீவிரமாக இருக்கிறது.

இதே தேமுதிகவை வளைத்துப் போட்டுவிடலாம் என கனவு கொண்டிருந்தது வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வைகோ உள்ளிட்டோர் நேரிலும் சந்தித்தனர். ஆனால் ஒரே போடாக, வாங்க எல்லோரும் திமுக கூட்டணிக்குப் போகலாம் என விஜயகாந்த் அழைப்பு விடுக்க நொந்து நூடுல்ஸாகிப் போனது வைகோ அண்ட் கோ. அதே நேரத்தில் தேமுதிக எப்படியும் தங்களுடன் கை கோர்க்கும் என்பதில் திடமான நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது திமுக. இந்த களேபரத்தில் எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லையே என கதறிய காங்கிரஸுக்கும் அடைக்கலம் தரப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி தர ஏக தெம்புடன் இருக்கிறது அக்கட்சி... இந்த கூட்டணி வியூகங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாத்தில் திமுகவின் பிரசன்னா, காங்கிரஸின் கோபண்ணா இருவரும் தெள்ளத் தெளிவாக, மக்கள் விரோத அதிமுக அரசை அகற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

அதிலும் கோபண்ணா இன்னும் ஒருபடி மேலேபோய், மக்கள் விரோத அதிமுக அரசை அகற்றுவதில் திமுக, காங்கிரஸ், தேமுதிக உறுதியாக உள்ளன. அதேபோல் மேலும் சில மதச்சார்பற்ற சக்திகளும் தங்களுடன் கை கோர்ப்பார்கள் என மக்கள் நலக் கூட்டணி உடையப் போவதையும் போட்டுடைத்தார். கோபண்ணாவின் கருத்துப்படி, திமுக- தேமுதிக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் கடைசிநேரத்தில் திமுக அணிக்கு வரலாம்.. எனவும் கோடிட்டுக் காட்டுகிறார் கோபண்ணா. ஆக திமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி ஒன்று உதயமாவது உறுதியாகி வருகிறது. அப்படி மெகா கூட்டணி அமையுமானால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் சப்தமே இல்லாமல் அதிமுக பக்கம் போய்விடும். மதிமுகவும் அதிமுக அணியை ஆதரிக்குமா? அல்லது "வழக்கம்போல" தனித்தே களம் காணுமா என்பது ஒரு புரியாத புதிர். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஓரிருவாரங்களில் களம் அனல் பறக்கத் தொடங்கிவிடும்!!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.