திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக 6 ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கருவாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். வங்கி உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சிவராம் (வயது 6). இவன் திருப்பூர்-மங்களம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை வழக்கம் போல் மாணவன் சிவராமை பெற்றோர் பள்ளிக்கூட பஸ்சில் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிக்கு பஸ் வந்ததும் மாணவன் சிவராம் பஸ்சில் இருந்து இறங்கி வகுப்பறைக்கு சென்றான். பின்னர் சிறிது நேரத்தில் மாணவன் சிவராமை காணவில்லை. இதையடுத்து அவனை தேடிப்பார்த்த போது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் ஓடி வந்து மாணவன் சிவராமை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கு மாணவன் சிவராமின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுப்பற்றி தெரியவந்ததும் மற்ற குழந்தைகளின் பெற்றோரும் பள்ளிக்கு திரண்டனர். இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழைத்து சென்றனர். பள்ளி கழிவறையில் ரத்த வெள்ளத்தில் மாணவன் பலியான சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருப்பூர் மத்திய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிவராமை கீழே தள்ளி விட்ட போது தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்தானா? அல்லது வேறு எப்படி இறந்தான் என்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாணவர் சிவராமை அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பங்கஜ் என்பவர் கல்லால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment