Latest News

  

தேமுதிக- 113; பாமக- 70; பாஜக- 51.... விஸ்வரூபமெடுக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி?


தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில் திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுகவுடன் கூட்டணி சேருமா என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, தனித்தே நின்றுவிடுமா என கேள்வியை எழுப்பிய பாமக ஆகிய கட்சிகளை தம்முடைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே மீண்டும் கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளிலும் பாஜக முழு வீச்சுடன் இறங்கியுள்ளது. தேமுதிகவுக்கு 113, பாமகவுக்கு 70, பாஜகவுக்கு 51 என்கிற பார்முலா அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை பாஜக நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகளில் பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை இணையவில்லை. இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தனி அணியாக களம் இறங்கி உள்ளன. திமுகவுடன் தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் தேமுதிக வரும்போது வரட்டும்...அதற்காக இறங்கிப் போக தேவையில்லை என்ற நிலையையும் திமுக மேற்கொண்டிருக்கிறது. பாமகவோ முதல்வர் வேட்பாளர் அன்புமணி என அறிவித்து தனித்தே களம் காண்பதாக கூறி வருகிறது.

அமித்ஷாவுக்கு வாழ்த்து தேமுதிக இதுவரை எந்த நிலைப்பாட்டையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எந்த கூட்டணியிலும் நாங்கள் இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறி வந்தாலும் பாஜக தலைவர் அமித்ஷா மீண்டும் பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அத்துடன் மைத்துனர் சுதீஷை டெல்லிக்கு அனுப்பி அமித்ஷாவுக்கு நேரிலும் வாழ்த்து சொல்ல வைத்திருக்கிறார்.

பாஜக தலைவர்கள் சந்திப்பு பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து விஜயகாந்த்தை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். பாஜகவும் சளைக்காமல் தேமுதிகவும் பாமகவும் எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறார்கள் என கூறி வருகிறது.

113 சீட்டுகள் இந்நிலையில்தான் தேமுதிகவுக்கு 113; பாமகவுக்கு 70; பாஜகவுக்கு 51 தொகுதிகள் என பங்கீடு செய்து கொள்ளலாம் என்ற பார்முலாவை முன்வைத்து அந்த கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிற கட்சிகளுக்கு பாஜக தம்முடைய 51 தொகுதிகளில் இருந்து தொகுதிகளை பிரித்துக் கொடுப்பது என்பதும் இந்த பார்முலாவில் அடக்கமாம்.

இதில்தான் சிக்கல் தொகுதிப் பங்கீட்டை தேமுதிகவும் பாமகவும் ஏற்றுக் கொண்டாலும் யார் தலைமையில் கூட்டணி? யார் முதல்வர் வேட்பாளர்? என்பதில்தான் முட்டுக்கட்டை நீடிக்கிறதாம். கூட்டணிக்கு தேமுதிகதான் தலைமை; நானே முதல்வர் வேட்பாளர் என்பது விஜயகாந்த் நிலைப்பாடு; பாமகவும் எங்கள் தலைமையில்தான் கூட்டணி; அன்புமணியே முதல்வர் வேட்பாளர் என்கிறது.

மோடி வருகை இந்த பஞ்சாயத்துக்கு தீர்வு காண்பதுதான் பாஜகவுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. கோவைக்கு பிப்ரவரி 2-ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். அதற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உயிர்ப்பித்து தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதற்காக பாஜக போராடி வருகிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். யார் எதை விட்டுக் கொடுப்பார்களோ?

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.