சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன் கோபுரங்கள் இயங்காததால் ஏர்செல், வோடோஃபோன், டாடா-டோகோமா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவை முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. சில இடங்களில மட்டுமே இவை இயங்குகின்றன. ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை உலகமே தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் மூலம் லைவ் ஆக அறிந்து வந்த நிலையில், சென்னை மக்களுக்கு அவர்கள் முடங்கியுள்ள ஏரியா தவிர மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதையே அறிய முடியாத நிலை நிலவுகிறது. பல இடங்களில் மீட்புக் குழுவினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், எந்த உதவியும் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அதே போல சென்னையில் பெரும்பாலான ஏ.டி.எம்களும் இயங்கவில்லை. இதனால் பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமல் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டதை நினைத்து மக்கள் நொந்து போயுள்ளனர். நெட்வொர்க் துண்டிக்கப்பட்டதால் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெட்ரோல் பங்குகளில் கிரிடிட் கார்ட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால், கையில் பணம் இருந்தால் மட்டுமே பொருள்கள் வாங்க முடியும், பெட்ரோல் போட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment