Latest News

போதும்டா சாமி சென்னை வாழ்க்கை: லாரி, டிராக்டரை பிடித்து சொந்த ஊருக்கு ஓடும் மக்கள்


சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் சிங்கார சென்னை சீரழிந்து சின்னாபின்னமாகிப்போனது, குடியிருப்பு வீடுகள் அடுக்குமாடி வீடுகள் மழைநீரில் மூழ்கிப் போனதால், மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கானோர் உண்ண உணவு குடிநீரின்றி அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் , லாரிகள், வேன்கள் என கிடைத்த வாகனங்கள் மூலம் சாரை சாரையாக சென்னையை விட்டு வெளியேறி வருகின்றனர். சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ளநீர், பல அடி உயரத்திற்கு தேங்கி உள்ளது. ஆனால், குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உணவின்றி குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.குடிக்க தண்ணீர் இல்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் உணவின்றி, குழந்தைகளுடன் பசியால் வாடி வருகின்றனர். பல இடங்களுக்கு மீட்புக் குழுவினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக உண்ண உணவு இன்றி எந்த உதவியும் கிடைக்காமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தவர்கள், மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்தனர். இவர்களையும் மழை அவ்வப்போது மிரட்டி வருகிறது. சென்னை முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக அம்பத்தூர் பால் பண்ணை மூடப்பட்டுள்ளது. வியாசர்பாடி, கொடுங்கையூர், மாதவரம், செங்குன்றம் போன்ற பகுதிகளில் பால் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆவின் பால்பூத்களில் மாத அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே பால் வழங்கப்படுகிறது. பலருக்கும் அட்டை வைத்திருந்தாலும் பால் கிடைக்கவில்லை. சென்னையில் பல இடங்களில் அரை லிட்டர் பாலின் விலை ரூ.75 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வாழ முடியுமா? மழை, வெள்ள பாதிப்பு நிலையை பயன்படுத்தி சென்னை ஹோட்டகள் அபரிமிதமாக கட்டண வசூலில் இறங்கி உள்ளன. இதனால் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வருகின்றனர். சென்னையில் தற்போதைய நிலை, பாதிப்பு ஆகியவற்றை பார்த்த பிறகு, சென்னையில் இனி வாழ முடியுமா என்பதே மக்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

5 லட்சம் பேர் தவிப்பு குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி, வீட்டை விட்டு வெளியேறவும் முடியாமல் முடியாமல் தவித்து வருகின்றனர். போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால் சென்னையை விட்டு வெளியேற முடியாதல் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தவித்து வருகின்றனர்.

நகரை விட்டு வெளியேறும் மக்கள் மழை வெள்ளம் சற்றே வடிந்து, இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. பாதிக்கப்பட்ட சாலைகள் ஓரளவிற்கு சீர் செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கியுள்ளதால், முடங்கியிருந்த சென்னைவாசிகள் பலரும் சாலைகள் சீர் செய்யப்பட்ட உடன் தற்போது நகரை விட்டு சொந்த ஊருக்கு திரும்பத்தொடங்கியுள்ளனர். நிலைமை திரும்பிய பின்னர் சென்னைக்கு வரலாம் என்ற மனநிலைக்கு ஏராளமானோர் வந்துவிட்டனர்

மூட்டை முடிச்சுகளுடன் ஓட்டம் சென்னை வெள்ளத்தில் சிக்கி அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், உயிர் பயத்தில், சொந்த ஊருக்கு செல்ல துவங்கி உள்ளனர். போதும்டா சாமி சென்னை வாழ்க்கை என்ற மனநிலைக்கு வந்த மக்கள் பலரும் மயிலாப்பூரில் கடற்கரை சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்று பூந்தமல்லி சாலை சென்று அந்த வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

மெட்ரோ ரயிலில் கோயம்பேடு பயணம் இன்னும் சிலரோ மெட்ரோ ரயில் மூலம் கோயம்பேடு சென்று அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கும், சொந்த ஊருக்கும் திரும்பத் தொடங்கியுள்ளனர். வெளியூர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. இதனால் லாரி, டிராக்டர் என எந்த வாகனம் கிடைத்தாலும் போதும் என்று செல்லத் தொடங்கிவிட்டனர்.

ஐ.டி ஊழியர்கள் வெளியேறினர் சோழிங்க நல்லூர், கேளம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் வசித்து வந்த பல ஐ.டி நிறுவன ஊழியர்கள் சென்னையை விட்டு, பெங்களூர், ஹைதராபாத்திற்கு கிளம்பியுள்ளனர். இவர்கள் அனைவரும், தரமணி, திருவான்மியூர் பகுதிகளில் உள்ள பறக்கும் ரயில் மூலம் பூங்கா ரயில் நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கினர். இதனால் பறக்கும் ரயில்களில் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

விமானத்தை மிஞ்சியது ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சில தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பலமடங்கு அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். அடைமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 150 ஆம்னி பேருந்துகள் மூழ்கி உள்ள நிலையில், சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு, விமான கட்டணத்தை விட கூடுதலாக, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கட்டணம் எவ்வளவு டிசம்பர் 2ம் தேதி இரவு, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, பெங்களூருக்கு, 5,000 ரூபாயும், நெல்லை, கோவைக்கு, 4,000 ரூபாய், மதுரை, சேலம், ஈரோடு ஆகிய இடங்களுக்கு, 3,000 ரூபாய் என கட்டணம் வசூலித்தனர். சென்னையில் இருந்து முக்கிய நகரங்களின் துாரத்தை கணக்கில் கொண்டு, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டண கொள்ளையை அரங்கேற்றினர். எப்படியாவது உயிர்பிழைத்தால் போதும் என்று நினைத்த மக்கள் பலரும் கட்டணத்தைப் பற்றி கவலைப்படாமல் ஊருக்கு கிளம்பிச் சென்றதை காணமுடிந்தது. சென்னையை விட்டு போனவர்கள் திரும்புவார்களா? காலம்தான் பதில் சொல்லும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.