Latest News

தூக்கி வெளியே போடு.. அப்படியே இழுத்து உள்ளே போடு.. கிறுகிறுக்க வைக்கும் அதிமுக தர்பார்


முன்னாள் டிஜிபி நட்ராஜ் அதிமுகவைவிட்டு விலக்கப்பட்ட அதே வேகத்தில் திரும்பவும் சேர்க்கப்பட்டுள்ளார். எந்த ஒரு விசாரணையுமின்றி, கட்சி எடுத்த இந்த நடவடிக்கை மற்றும் பல்டி, துக்ளக் ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வெள்ள சேத தடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்ததாக தந்தி டிவியியில் மூத்த பத்திரிகையாளர் நடராஜ், தொலைபேசி மூலம், பேட்டியளித்துள்ளார். அப்போது, பணியில் இருந்த ஊழியர் யாரோ, தவறுதலாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் போட்டோவை டிவி திரையில் காண்பித்துவிட்டார். பொதுவாக இதுபோன்ற தவறுகள் மீடியா உலகில் நடப்பது சகஜம். காட்சி ஊடகங்களோ, ஆன்லைன் ஊடகங்களோ தங்களது தவறுகளை உடனடியாக திருத்திக்கொண்டு செய்தி வெளியிட முடியும். ஆனால் பிரிண்ட் மீடியாவில் அப்படி கிடையாது.

நட்ராஜ் நீக்கம் தவறை உடனே திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாத, பிரிண்ட் மீடியாவில் கூட ஏதோ ஒரு போட்டோவுக்கு சம்மந்தம் இல்லாத விளக்க உரை (கேப்ஷன்) வந்த நிகழ்வுகள் ஏராளம் உள்ளன. இந்த கவன சிதறல் தவறுக்காக, கட்சியே கதியாக இருந்த நட்ராஜ் அவசர கதியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா? இதற்கு காரணம், ஆட்சியை விமர்சித்து, அந்த நட்ராஜ் என்ற பெயர் கொண்டவர் பேசிவிட்டதுதானாம். நாட்டிலுள்ள ஒரு நட்ராஜ் ஆட்சியை விமர்சித்து பேசியதற்காக தனது சொந்த கட்சியை சேர்ந்த ஒரு நட்ராஜை கட்சியை விட்டு தூக்கும் நடைமுறையை நினைத்து பார்த்தால், கோல்டன் பீச்சில் அசைவற்று நிற்கும் மனிதன் கூட விழுந்து, விழுந்து சிரித்துவிடுவார்.

முதல்வரே செய்யலாமா ஒருவரை கட்சியைவிட்டு நீக்கிவிட்டு அவரோடு ஒட்டும், உறவும் சக கட்சியினருக்கு இருக்க கூடாது என்று உத்தரவு வெளியிடுவது மாஜி டிஜிபிக்கு எவ்வளவு மன உளைச்சலை கொடுத்திருக்கும்? மேலும், இந்த நடவடிக்கையை ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் மட்டும் செய்திருந்தால் கூட கட்சி தலைமை சரியில்லை என்ற முனுமுனுப்போடு கடந்துவிடலாம். ஆனால், தமிழக அரச நிர்வாகத்தை நடத்துபவர்தான் அந்த கட்சியின் பொதுச்செயலாளர், அவர்தான் விசாரணையின்றி நட்ராஜ் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

செங்கோல் வளையலாமா ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒருவர், குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை கூப்பிட்டு விசாரிக்காமல், அல்லது விசாரிக்க உத்தரவிடாமல், எடுத்த எடுப்பிலேயே கட்சியை விட்டு நீக்கி உத்தரவிடுவது என்பதை மக்களால், எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், 7 கோடி மக்களுக்கும், நீதி பரிபாலனம், செம்மையாக சென்று சேர்க்க வேண்டிய செங்கோல் அவர் கையில்தான் உள்ளது. நட்ராஜ் விஷயத்தில் போட்டோவை பார்த்தே தீர்ப்பு வழங்கப்பட்ட கொடுமை அரங்கேறியதை என்னவென்று சொல்வது?

பல்டி இதில் அடுத்த காமெடி என்னவென்றால், தந்தி டிவி தனது தவறு குறித்து விளக்கம் அளித்த நிலையில், மறுநாளே, நட்ராஜின் நீக்கம் ரத்து செய்யப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது. தவறை உணர்ந்து, அதை திருத்திய நடவடிக்கையை பாராட்டலாம்தான். ஆனால், தவறு நடந்ததாக எந்த ஒரு விளக்கமும் தலைமையிடமிருந்து வரவில்லை என்பது இதில் கவனிக்கத்தக்கது.

விளக்கம் இல்லை நட்ராஜை நீக்கியதற்கும், மீண்டும் சேர்த்ததற்கும், காரணம் கூறாமல் ஒரு கட்சி தலைமை நடந்துகொண்டுள்ளதை அக்கட்சி தொண்டர்கள் எப்படி ஜீரணித்துக்கொள்கிறார்கள் என்பதே இதில் ஆச்சரியம். ஒருவரை நீக்கினாலும், சேர்த்தாலும், தலையை ஆட்டி ஆமோதிக்கும் வேலை மட்டுமே தொண்டர்களுக்கெனில், அதில், அவர்கள் சிந்திக்கும் ஆற்றலுக்கு வேலை எங்கு உள்ளது?

அமைச்சர்களுக்கும் இதே கதி ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் அமைச்சர்கள் பலரையே அவ்வப்போது பதவியை விட்டு நீக்கியுள்ளது கட்சி தலைமை. அதற்கும், எந்த காரணமும் கூறப்படுவதில்லை. கட்சி தொண்டர்கள் தலையாட்டலாம், ஆனால், பொதுமக்களுக்கு அமைச்சர்களை நீக்கும்போது காரணம் கூறப்பட வேண்டியது அவசியமில்லையா?

துக்ளக் நிர்வாகம் முகமது பின் துக்ளக் மன்னர் ஆட்சி காலத்தில் அவசரப்பட்டு, யோசிக்காமல் பல முடிவுகள் எடுக்கப்பட்டு, பிறகு உடனடியாக அது மாற்றப்படுமாம். ஆனால், மாற்றும் முடிவும் பாதகமானதாகவே இருந்தது என்கிறது வரலாறு. நட்ராஜ் விவகாரத்தில் அதிமுக நடந்துகொண்டதை வைத்து பார்த்தால், இப்படிப்பட்ட யூகிக்க முடியாத ஒரு துக்ளக் ஆட்சியை நோக்கி செல்கிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.