ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை; மத்திய அரசுக்குதான் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதனால் 7 தமிழர் விடுதலையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன், முருகன் சாந்தன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜூலை 15-ந் தேதி தொடங்கி 11 நாட்களாக நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் ஆஜராகி இருந்தார். அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் முடிவடைந்து ஆகஸ்ட் 12-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பின் அம்சங்கள்: - ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. - சி.பி.ஐ. விசாரித்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசுக்குதான் விடுதலை செய்வது தொடர்பான அதிகாரம் உண்டு. - ஆயுள் தண்டனை என்பது குறிப்பிட்ட ஆண்டுகாலமாக நிர்ணயிக்கப்பட்டால் அதை மாநில அரசு குறைக்க முடியாது. - சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் மன்னிப்பு போன்றவற்றை மத்திய அரசுதான் வழங்க முடியும். இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத் தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி ஹெச். எல். தத்து இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment