மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உட்பட சிறையில் உள்ள மொத்தம் 37 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அரசிடம் வெளியுறவுத்துறை மூலம் வலியுறுத்த உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்கை வசம் உள்ள 55 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், கடந்த 8ம் தேதி இலங்கை கடற்பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்து கரை ஒதுங்கிய 4 தமிழக மீனவர்களையும் திரும்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்படும் மீனவர்களுக்கு சொந்தமான படகுகள் திருப்பி அளிக்கப்படுவதில்லை என்பதை தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாகவும், இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு வெளியுறவுத்துறை மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment