Latest News

ஈழத்தமிழர்களை பற்றி மோடி- ஜெயலலிதா பேசியது என்ன? கேட்கிறார் வைகோ


ஈழ தமிழர்களை பற்றி மோடியும், ஜெயலலிதாவும் என்ன பேசினார்கள் என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். உடல்நிலை சரியில்லை என்று ஜெயலலிதா நாடகமாடுவதாகவும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மதிமுக சார்பில் திராவிட இயக்க பயிற்சி பட்டறையை ஈரோட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,1929ல் தந்தை பெரியார் திராவிட இயக்க பயிற்சி பட்டறையை அப்போது 15 தொண்டர்களை வைத்து தொடங்கினார். தமிழகத்திற்கு இன்றைய சூழலில் திராவிட இயக்க சிந்தனை மிகவும் அவசியமானது என்பதால் மதிமுக பயிற்சி பட்டரை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்றார்.

சசிபெருமாள் மரணம் மதுவிலக்கு பூரணமாக அமல்படுத்த வேண்டும். மதுவிலக்குக்காக சசிபெருமாளின் உயிர் பறிபோகியுள்ளது. போராட்டம் நடத்திய சசிபெருமாள் இறந்த ஒரு மணி நேரத்தில் நான் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றேன். உளவுத்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டின்படி போலீஸ் அதிகாரிகள் அவசர அவசரமாக சசிபெருமாளின் உடலை போஸ்மார்டம் செய்து அனுப்ப பார்த்தார்கள். அவர் ரத்த வாந்தி எடுத்த துணிகளை அப்புறப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் நான் அதனை தடுத்தேன். அவர் கொல்லப்பட்டுள்ளார்.

மதுவினால் சீரழிவு இன்று தமிழ்நாட்டில் நான்கு வயது குழந்தைகூட மதுஅருந்தும் கலாச்சாரம் பெருகிவிட்டது. பெற்ற மகளையே கொடுமை செய்யும் நிலை வந்துவிட்டது. இந்த நிலை மது கலாச்சாரத்தால் ஏற்பட்டுள்ளது. தமிழகம் கலாச்சாராம் பண்பாடுக்கு பெருமை கொண்டது. ஆனால் இன்று இந்த மதுவால் சீரழிவு ஏற்பட்டுள்ளது.

பூரண மதுவிலக்கு இப்போது அரசாங்கம் ஆகஸ்ட் 15க்கு பிறகு மதுக் கடைகளை குறைக்கவும், மது விற்பனை நேரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வருகிறது. மதுக்கடைகளை குறைத்தால் குடிக்கு அடிமையானவர்கள் குடிக்கத்தான் செய்வார்கள். அதேபோல் விற்பனை நேரத்தை குறைத்தால் ஆளும்கட்சி மாவட்ட செயலாளர்கள் கள்ளச்சந்தையில் மது விற்று லாபம் பார்ப்பார்கள். ஆகவே இதற்கு ஒரே தீர்வு பூரண மதுவிலக்குதான். அனைத்து மதுக்கடைகளையும் இழுத்து பூட்ட வேண்டும்.

ஈழத்தமிழர் பிரச்சினை பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்திற்கு சென்று அரை மணி நேரம் காத்திருந்து வரவேற்றுள்ளார் ஜெயலலிதா. மேலும் மோடியை வீட்டுக்கே கூட்டி சென்று அவரே உணவு பரிமாறியுள்ளார். பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா அரசியல் ரீதியாக பேசியதில் ஈழப் பிரச்சனை பற்றி பேசியதாக கூறியுள்ளார்கள். ஈழப்பிரச்சனை பற்றி மோடியிடம் என்ன பேசினார் என்பதை பற்றி தெளிவுப்படுத்த வேண்டும்.

எல்லாம் நாடகமா? நேற்று நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கும் போது ஜெயலலிதாவுக்கு உடல்நிலை நன்றாகவே இருப்பதாக தெரிகிறது. இது மகிழ்ச்சிதான். ஆனால் இதே ஜெயலலிதா மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. அதற்கு காரணம் தனது உடல்நிலை சரியில்லை என்று கூறினார் இதுவெல்லாம் வெறும் நாடகம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.