இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகள் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும் உயர் மட்ட கூட்டம் நடத்தி ஆலோசித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.
அதிபர் தேர்தலில் படுதோல்வியை தழுவிய மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை குறிவைத்து, நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்குகிறார். இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் 1976 தொடங்கி 2009-ம் ஆண்டுவரை ஆயுதம் ஏந்தி நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், அவர்கள் அரசியல் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று காலை முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும் ஒரு உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலிகள் கலந்து கொண்டனர். அப்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், தமிழ் மக்களுக்கு ஜனநாயக ரீதியில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதித்தனர். இறுதியில் ‘ஜனநாயக போராளிகள் கட்சி' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி, அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கெடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பரம எதிரியான ராஜபக்ச போட்டியிடும் நிலையில், விடுதலைப் புலிகளும் போட்டியிடப் போவதாக முடிவெடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment