ராமேஸ்வரம் : மறைந்த முன்ளாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடலை நல்லடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமார் மேற்கொண்டு வருகிறார். மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்றிருந்த அப்துல் கலாம், மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நேற்று மாலை (27-07-2015) மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்.
கலாமின் இறுதிச் சடங்குகள் வரும் 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் முழு ராணுவ மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள கலாமின் இல்லமான ராஜாஜி மார்கில் அவரது உடலுக்கு தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் இறுதிச் சடங்குகள் நடத்தலாம் என்று ஆலோசித்த போது, கலாமின் குடும்பத்தார், அவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த மண்ணில்தான் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து, மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, மறைந்த அப்துல் கலாம் உடலை நல்லடக்கம் செய்ய ராமேஸ்வரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை அடுத்த பேய்க்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேய்க்கரும்பு கிராமம் அமைந்துள்ளது. இங்கு கலாமின் உடலை அடக்கம் செய்ய 1.85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார்.
No comments:
Post a Comment