Latest News

  

ஆர்.கே.நகர்: சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடியில் 'படு ஸ்பீடாக மறுதேர்தல்' - 85.5% வாக்குகள் பதிவு!!


சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவான 181வது வாக்குச் சாவடியில் இன்று நடைபெற்ற மறுதேர்தலில் 85.5% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் உள்ள 332 வாக்காளர்களில் இதுவரை 284 பேர் வாக்களித்தனர். முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் உட்பட 28 பேர் போட்டியிட்ட சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. 2 லட்சத்து 40 ஆயிரத்து 543 வாக்காளர்களை கொண்ட இத் தொகுதியில் 230 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.


இதில் மொத்தம் 74.4 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஆனால் பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வடக்குப்பகுதி (கீழ் மேற்கு பகுதி) சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 181-வது வாக்குச்சாவடியில், வாக்காளர்கள் பட்டியலை விட கூடுதலான வாக்குகள் பதிவாகி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குளறுபடி காரணமாக 181-வது வாக்குச்சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு மறுவாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 332 பேர் வாக்காளர்கள். இன்றைய மறு வாக்குப் பதிவுக்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களது இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 284 பேர் அதாவது இன்றைய தேர்தலில் 85.5% வாக்குகள் பதிவாகின.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.