டெல்லி: மத்திய அமைச்சகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாயம் அடைந்துள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக ஆவணங்கள் திருடப் பட்டு வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் இருவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியின் சாணக்யபுரி காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவு போலீஸாரால் நேற்று முன் தினம் கைதான ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அன்று நள்ளிரவில், பத்திரிகையாளரான சாந்தானு சைக்கியா மற்றும் எரி சக்தி ஆலோசகரான பிரயாஸ் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சைக்கியா டெல்லியில் ஒரு செய்தி இணைய தளம் நடத்தி வருகிறார். பிரயாஸ், எண்ணெய் மற்றும் எரிசக்தி தொழில் துறைக்கான ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருந்து திருடப்படும் முக்கிய ஆவணங்களை பெருநிறுவனங்களிடம் விலை பேசி பணமாக்கி வந்துள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாயம் அடைந்துள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சகங்களில் ஆவணங்கள் திருடப்பட்டதை அம்பலப்படுத்திய டெல்லி போலீஸாருக்கு பாராட்டுகள். திருடப்பட்ட ஆவணங்கள் மூலம் ஆதாயமடைந்தவர்களையும் கைது செய்ய போலீசார் முயற்சிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment