Latest News

மேலத்தெரு அண்ணாவியார் சகோதரர்களின் கல்விச்சேவை

அதிரையில் தன்னலம்பாராது கல்விச்சேவை புரிந்தோர் ஏராளாமானோர் அனைத்து தெருவிலும் உள்ளனர் என்றாலும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர் 'அதிரையின் கல்வித் தந்தை' சேக் ஜலாலுதீன் அப்பா அவர்கள்.

அவர்களுடைய MKN டிரஸ்ட் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட காதிர் முகைதீன் கல்லூரி, ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை இன்றும் எண்ணற்றோருக்கு அறிவொளியை வழங்கிக் கொண்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ். அன்னாருடைய கல்விச்சேவையை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

அதுபோல், மேலத்தெருவில் எண்ணற்றோருக்கு ஆரம்ப நிலை கல்வியை வழங்கியவர்கள் பெரிய வாத்தியார் அப்பா, சின்ன வாத்தியார் அப்பா என அன்புடன் அழைக்கப்பட்ட சகோதரர்களான செய்யது முஹமது அண்ணாவியார் மற்றும் நூர் முஹமது அண்ணாவியார் ஆவார்கள்.

 
மழைப்பாட்டு பாடிய புலவர் நெய்னா முஹமது அண்ணாவியார் அவர்களின் வழித்தோன்றல்களான வாத்தியார் சகோதரர்கள் குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை கல்வியை கற்றுத்தர வேண்டும் என்ற நன்நோக்கில் இன்று எம்எம்எஸ் தேங்காய்வாடி அமைந்துள்ள இடத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தனர். கால ஓட்டத்தில் பள்ளிக்கான மாற்று இடமாக அன்றைய 'சூனா வீட்டு' திண்ணையில் பள்ளிக்கூடம் தொடர்ந்துள்ளது. 

இந்த ஆரம்ப பள்ளிக்கூடம் தான் பின்பு அரசு ஆரம்பப் பள்ளிக்கூடமாக மாறி அன்றைய தமிழக அமைச்சரும் பின்னாளில் இந்திய ஜனாதிபதியுமான (ராஜாமடத்தை சேர்ந்தவரும் மேலத்தெரு சூனா வீட்டு 'ரொக்கக்கேஸ்' என்கிற மர்ஹூம் நூர்தீன் அவர்களின் நெருங்கிய பள்ளித்தோழருமான) வெங்கட்ராகவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு இன்றும் தொடர்கிறது ஆனால் அரசு பள்ளியான பின்பும் இந்தப்பள்ளிகூடம் மேலத்தெருவாசிகளால் இன்றும் 'சூனா வீட்டு பள்ளிக்கூடம்' என்றே நன்றியுடன் அழைக்கப்படுகிறது.

இந்த அண்ணாவியார் வாத்தியார் சகோதரர்களிடம் பாடம் பயின்ற மாணவர்களில் ஓரே ஒருவர் இன்னும் அல்லாஹ் உதவியால் ஹயாத்துடன் உள்ளார்கள், அவர் எம்எம்எஸ் குடும்பத்தை சேர்ந்த முஹமது பாசின் மாமா அவர்கள் (கடைத்தெருவில் எம்எம்எஸ் மளிகை கடை என்ற பெயரில் கடை நடத்தியவர்கள்).

பெரிய வாத்தியாரப்பா செய்யது முகமது அண்ணாவியார் அவர்கள் தன் குடும்பத்தினரை போலவே பல புத்தகங்களை எழுதியுள்ளார்கள் அதற்காக கீழக்கரை சீதக்காதி அறக்கட்டளையினரால் அவர்கள் ஹயாத்தாக இருந்த காலத்திலேயே ரூ.10,000 பொன்முடி வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். 
 


மேலும் அன்றைய மேலத்தெரு குத்பா பள்ளியின் முத்தவல்லியாக இருந்து திறம்பட செயலாற்றி பள்ளிவாசலை சுற்றி ஒரு பூஞ்சோலையை உருவாக்கியிருந்தார்கள் மேலும் இன்று ஜூம்ஆ பள்ளிக்கு முன்புறம் வணிக வளாகமாக மாறிவிட்ட புளியமரத்து மையத்தாங்கரையை சுற்றி முள்வேலி அமைத்தும் பாதுகாத்தார்கள். இவர்களுடைய நிர்வாகத்தில் பள்ளி இருந்தவரை நோன்பு திறக்கும் நேரத்தை ஊருக்கே கேட்டுமளவு சக்தி வாய்ந்த வெடியை வெடித்து அறிவிக்கும் பழக்கமிருந்தது.

அந்தக்காலத்தில் வீட்டுக்குவீடு தண்ணீருக்காக கிணறு தோண்டும் பழக்கமிருந்ததால் நீரோட்டம் பார்ப்பதற்கு பெரிய வாத்தியரப்பா அவர்களை அழைக்கும் வழக்கம் மக்களிடமிருந்தது. அவர்களுடைய கண்டிப்புக்கு அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமல்ல முஹல்லாவே கட்டுப்பட்டது, அதனால் தான் சுமார் 350 வருட பழமையான குத்பா பள்ளியை மிகச்சிறப்பாக அவர்களால் நிர்வகிக்க முடிந்தது. 


பெரிய வாத்தியாரப்பா மற்றும் அண்ணாவியார் குடும்பத்தினரின் இலக்கிய படைப்புக்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்காக நூலகத்தில் வைத்து சிறப்பு சேர்த்துள்ளனர்.

பெரிய வாத்தியரப்பா செய்யது முஹமது அண்ணாவியார் அவர்கள் குத்பா பள்ளி நிர்வாகியாக இருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு துணையாக 'வாத்தியப்பா' என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட மர்ஹூம் 'அகமது ஜலாலுதீன் காக்கா' அவர்கள் அனைத்து வக்து தொழுகைகளுக்கும் ஆஜராகக்கூடிய நல்ல மனிதராக திகழ்ந்தார்கள் மேலும் அரிக்கேன் விளக்குடன் இஷா மற்றும் சுபுஹூ தொழுகைக்கு வரும் அழகும், பாங்கு சொல்லும் மாண்பும் யாராலும் மறக்க முடியாதவை. இந்த வாத்தியப்பா அவர்கள் தன் வீட்டு வாசலில் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்ல தண்ணீர் கிணறு தோண்டி இலவச விநியோகம் செய்த சிறப்புக்குரியவர்கள்.

குத்பா பள்ளியையே தன் வீடாக கருதி சேவகம் செய்துவந்த மர்ஹூம் ஷரீஃப் அப்பா அவர்களும் வாத்தியாரப்பா அண்ணாவியார் அவர்களுக்கு ஒரு துணையாக இருந்தார்கள். அதேபோல் மேலத்தெரு குட்டப்புறா வீட்டுக்கு அடுத்த வீட்டில் செந்தூரம் விற்கும் வீட்டைச் சேர்ந்த அப்பா ஒருவரும் (பெயர் தெரியவில்லை) தவறாமல் தொழுகையை பேணக்கூடியவராக இருந்தார்கள்.

அண்ணாவியார் அப்பா போலவே கல்விச்சேவை புரிந்த இன்னொருவரை பற்றியும் எழுதவில்லையானால் இந்தத் தொகுப்பு நிறைவு பெறாது, பட்டுக்கோட்டையில் டுட்டோரியல் கல்லூரி ஒன்றையும் அதிரையில் இமாம் ஷாபி பள்ளிக்கூடத்தையும் நிறுவிய மர்ஹூம் குழந்தை சேக்காதி அவர்கள் தான் அது. கல்விச்சேவைக்கு மேல் மேலத்தெரு பாக்கியாத்து ஸாலிஹாத் பள்ளிவாசலை நிறுவியவர்களில் ஒருவராகவும் ஜூம்ஆ பள்ளியின் கட்டுமானத்திலும் தன் பங்கையாற்றியவர்கள்.

இந்தத் தொகுப்பை எழுதுவதற்கு காரணமாக இருந்த அதிரை அஹமது காக்கா அவர்களுக்கும் அவர்களின் பதிவான 'அதிரை வரலாற்றில் நான் கண்ட நல்லவர்கள்' 


என்ற தொகுப்புமே முக்கிய காரணம் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி : 
நினைவலைகள் பகிர்வு
S. அப்துல் காதர் 
&
அதிரை அமீன்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.