Latest News

காஷ்மீர்: மெஹ்பூபா கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி? ஆதரவு தரப் போவது யார்? குழப்பம் ஆரம்பம்!

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபைதான் உருவாகியிருக்கிறது. மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 25 இடங்களில் வென்றுள்ளது. இப்படி எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதால் ஜம்மு காஷ்மீர் அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. 87 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கட்சிகள் வென்ற இடங்கள் விவரம்:

மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) - 28 பாரதிய ஜனதா கட்சி - 25 தேசிய மாநாட்டு கட்சி (என்.சி) - 15 காங்கிரஸ் -12 மக்கள் மாநாட்டு கட்சி -2 சி.பி.எம்- 1 சுயேட்சைகள் - 3 ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன்னணி - 1

பி.டி.பி.ஆட்சி? 'கமிட்' பண்ணாத கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி 44 இடங்களைப் பெற்ற கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்த ஒரு கட்சியுமே தனித்து ஆட்சி அமைக்கவே முடியாத 'தொங்கு சட்டசபை' நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தான் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. தற்போதைய நிலையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் மெஹ்பூபா முப்தியின் பி.டி.பி. ஆட்சி அமைக்க வாய்புகள் அதிகம் உள்ளன. இந்த கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ், என்.சி. ஆகியவை ஆதரவளிக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன. இத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த பி.டி.பி. கட்சித் தலைவர் மெஹ்பூபா முப்தி, ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் அவசரம் காட்டவில்லை. எங்கள் கட்சியின் கொள்கைகளுடன் ஒத்துப் போகிற பொதுசெயல் திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயல்பட தயாராக இருக்கிற கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். ஆட்சி அமைப்பதற்கு அவசரம் காட்டவில்லை. உரிய காலம் எடுத்து ஆலோசித்து முடிவு அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

பி.டி.பிக்கு ஆதரவு அளிக்க தயார் என்று மறைமுகமாக கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ஒருபோதும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு தரமாட்டோம். அதே நேரத்தில் பி.டி.பி. மற்றும் என்.சி. ஆகிய கட்சிகளுடன் ஏற்கெனவே நாங்கள் இணைந்து கூட்டணி அமைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பி.டி.பி. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக சட்டசபை தேர்தலில் தோல்விகளைத் தழுவி எதிர்க்கட்சிகளின் ஏகடியத்துக்கு ஆளாகி வரும் காங்கிரஸ் இந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பி.டி.பி.யை ஆதரிக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

 ஒமர் அப்துல்லா நிலை என்ன? 

1998 முதல் 2001 ஆம் ஆண்டு வரை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சியும் (என்.சி.) இடம்பெற்றிருந்தது. இதனால் பாஜக, (25 இடங்கள்) தேசிய மாநாட்டுக் கட்சி (15 இடங்கள்), பிரதமர் மோடியை புகழ்ந்த முன்னாள் பிரிவினைவாத தலைவர் சஜன் லோனின் மக்கள் மாநாட்டு கட்சி (2 இடங்கள்) சுயேட்சைகள் (3 இடங்கள்) ஆதரவுடன் (மொத்தம் 45) கூட்டணி அரசு அமையலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஒமர் அப்துல்லாவோ இதை நிராகரித்துவிட்டார். தேர்தல் முடிவுகள் குறித்து ஒமர் அப்துல்லா கூறுகையில், 99% பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். மெஹ்பூபா முப்தி கேட்டுக் கொண்டால் பி.டி.பி. ஆட்சி அமைக்க ஆதரவு தர தயார் என்றார். இதனிடையே பாரதிய ஜனதா கட்சி, ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன் பின்னரே அதிகாரப்பூர்வமாக ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்த கருத்தை பாஜக தெரிவிக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பி.டி.பி. தலைமையிலான அரசில் ஏறத்தாழ சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்கிற உறுதிமொழி கிடைக்கும் நிலையில் அடுத்த கட்டம் குறித்து பரிசீலிப்போம் என்று ஒன் இந்தியாவுக்கு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும்? எந்த கட்சி ஆதரவு அளிக்கும்? என்ற குழப்பமான நிலைமையே நீடிக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.