ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 29ஆம் தேதி (நாளை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 22ஆம் தேதி அறிவித்தனர்.
இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் முதற்கட்ட சமரச பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (26ஆம் தேதி) நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று (27ஆம் தேதி) நடைபெற்றது. தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு துணை ஆணையர் யாஸ்பீன் பேகம் தலைமையில் நடைபெற்ற இதில், போக்குவரத்து நிர்வாகம் தரப்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், சேலம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்கள் தரப்பில், அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச., தே.மு.தொ.ச., பட்டாளி தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எப். ஆகிய தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி 29ஆம் தேதி (நாளை) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில், இன்றே (28ஆம் தேதி) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், வள்ளியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ்களை இயக்காமல் தொழிலாளர்கள் இன்று நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சென்னையில் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கம் போல் பேருந்து ஓடும்
இந்நிலையில், நாளை வழக்கம் போல் பேருந்துகள் அனைத்தும் ஓடும் என தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, பயணிகள் ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்களைத் தேடிச் சென்றனர். இதையடுத்து அந்த ஆட்டோக்களின் கட்டணங்களும் அதிக அளவு உயர்த்தி வசூலிக்கப்பட்டது. இதனால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
No comments:
Post a Comment