Latest News

எச்சரிக்கை ! காங்கிரஸ் எதிர்ப்பின் பின்னணியில் தெரிந்தும் தெரியாமலும் ஒளிந்துள்ள பா.ஜ.க ஆதரவு..


காங்கிரசைத் துடைத்தெறிய வேண்டும். ஓகே. கருத்து மாறுபாடில்லை. ஆனால் பா.ஜ.க? நமது முக நூல் தீவிரர்களும் சரி, காங்கிரசை ஒழித்துக்கட்டினால் போதும் என அரசியல் பேசும் கனவான்களும் சரி , பா.ஜ.க குறித்து இப்படியெல்லாம் பேசுவதில்லை. கொஞ்சம் அழுத்தில் கேட்டால் மட்டும். பா.ஜ.கவும் மோசந்தான் என்று இழுப்பார்கள்.

காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் அதன் ஊழலை ஒரு பெருங் குற்றமாக வைப்பார்கள். தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சினையில் செய்த துரோகத்தைச் சுட்டுவார்கள். உண்மைதான். ஆனால்… முதலில், இந்த ஊழலலெடுத்துக் கொள்வோம். காங்கிரஸ் தனியாக இந்த ஊழலைச் செய்யவில்லை. கார்பொரேட்களுடன் கூட்டாகத்தான் இதைச் செய்தது. ஆனால் இன்று கார்பொரேட்கள் அனைத்தும் காங்கிரசை வீழ்த்துவதில் கச்சை கட்டிக் கொண்டு நிற்பதும் மோடியைப் பிரதமராக்குவதற்கு லட்சக்கணக்கான கோடிகளைச் செலவிடுவதும் ஏன் என விளக்க மாட்டார்கள். அவர்களால் விளக்க இயலாது. அதே போலத்தான் ஈழப்பிரச்சினையும். ஈழப் பிரச்சினையில் பா.ஜ.க அரசு என்னென்ன மாதிரி துரோகங்கள் செய்தன என்பதை விளக்கி தோழர் கு.இராமகிருட்டினனின் ‘தந்தை பெரியார் கழக’த் தோழர்கள் ஒரு குறு நூலையே வெளியிட்டுள்ளனர். இதற்கும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களிடம் எந்தப் பதிலும் இருக்காது.

நேற்று ஆர்.எஸ்.எஸ் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். நாடு ஒரு பெரிய மாற்றத்தை எதிர் நோக்கியுள்ளது என மகிழ்ச்சி பொங்க, நெஞ்சு விம்மச் சொல்லியுள்ளனர். பிரதமர் வேட்பாளராக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டுள்ள மோடி ஒரு சுயம் சேவக் எனத் தாங்கள் பெருமை கொள்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் புதிய வாக்காளர்கள் 15 கோடிப் பேர்கள் பங்கு பெற உள்ளனர். இந்த இளைஞர்கள் உலகமயக் காலக் குழந்தைகள். வரலாறு அறியாதவர்கள். technocrats, over specialists. மோடியையும் வைகோவையும் கொண்டாடத் தயங்காதவர்கள். இவர்களை நம்பித்தான் கார்பொரேட்கள் கடை விரிக்கின்றன. மோடியை முன்நிறுத்துகின்றன. மாற்றத்தை விரும்பும் புதிய சமூக எழுச்சி என ஆர்.எஸ்.எஸ் பூரிக்கிறது.

மீண்டும் சொல்கிறேன் ஊழல், பொருளாதாரக் கொள்கைகள், அயலுறவு அணுகல் முறைகள், ஈழப் பிரச்சினை எதிலும் காங்கிரசுக்கும் பா.ஜ.கவிற்கும் இம்மியும் வேறுபாடில்லை.

ஆனால் பா.ஜ.கவிடம் கூடுதலாக மதவாதப் பாசிசம் உள்ளது.

எனில் வெறுமனே காங்கிரஸ் வெறுப்பு மட்டும் பேசுவதில் என்ன பயன். இதன் உள் நோக்கம் என்ன?

இவர்கள் இரண்டையுமே எதிர்க்கிறார்கள் எனில் ஏன் பா.ஜ.க குறித்து இந்த மவுனம்?

இவர்கள் இரண்டையுமே எதிர்க்கிறார்கள் எனில் மூன்றாவது அணியைக் கட்ட முயலும் இடதுசாரிகளின் முயற்சி ஏன் இவர்களிடம் இத்தனை கேலிக்குரியதாகிறது?

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.