புதுச்சேரியில் பிளஸ்2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன் இன்று கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, வைசியால் வீதியில் இயங்கி வரும் சுசிலா பாய் அரசு மேல்நிலைப்பள்ளி படித்து வரும் பிளஸ் 2 மாணவிகள் 5 பேரை கடந்த சில நாட்களுக்கு சிறப்பு வகுப்பு இருப்பதாகக்கூறி ஆசிரியர் சுப்பிரமணியன் அழைத்திருக்கிறார். அவர்களில் இரண்டு மாணவிகளை தனித்தனி அறைகளில் உட்கார வைத்திருக்கிறார். பின்பு அதில் ஒரு மாணவியிடம் சென்று ஆபாசமாக பேசியும், முத்தமிட முயற்சி செய்துள்ளார். மேலும், பாலாத்காரம் செய்வதற்கும் ஆசிரியர் முயற்சி செய்தாராம்.
இதையடுத்து, அந்த மாணவி பென்சில் கொண்டு ஆசிரியர் சுப்பிரமணியத்தை தாக்கி கூச்சலிட்டுள்ளார். அப்போது ஆசிரியர் சுப்பிரமணியன் அந்த மாணவியை தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படியும், அவ்வாறு இணங்காவிட்டால் உன்மீது தவறான பட்டங்களை சுமத்தி விடுவேன் என மனரீதியாக துன்புறுத்தினாராம். ஆனால், அம்மாணவி எதற்கும் இடம் கொடுக்காமல் அந்த அறையிலிருந்து வெளியேறி இருக்கிறார்.
இதையடுத்து, நடந்தவற்றை தனது சக மாணவிகளிடம் அந்த மாணவி கூறியிருக்கிறார். முதலில் வெளியில் வராமல் இருந்த இந்த தகவல் கடந்த இரு தினங்களுக்கு முன் வெளிவந்திருக்கிறது. இந்த விவகாரம் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் சமூக நலத்துறையை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர், ஆசிரியர் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நல ஆணையத்திடமும் மனு கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை இந்திய மாணவர் சங்கமும், மாதர் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களும் லாஸ்பேட்டையில் உள்ள ஆசிரியர் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கூறினார். ஆனால், ஆக்ரோஷம் தனியாத அவர்கள் ஆசிரியர் சுப்பிரமணியனை வெளியே வருமாறு அழைத்தனர். வெளியே வந்த சுப்பிரமணியன் மீது முட்டைகளையும், காய்கறிகளையும் எறிந்தனர்.
இதையடுத்து, நிலைமை மோசமாவதை அறிந்த லாஸ்பேட்டை காவல்துறையினர் ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து அழைத்து சென்றனர்


No comments:
Post a Comment