Latest News

  

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்



திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட்.

2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது 100வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் மூலம் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக் கோளை தாங்கிச் சென்றது.

ராக்கெட் செலுத்தப்பட்ட 17வது நிமிடத்தில், முதலில் பிரெஞ்சு செயற்கைக் கோளை அது புவிவட்டப் பாதையில் விட்டது. அடுத்து ஜப்பான் செயற்கைக் கோள் புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது.

100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் கண்டு களித்தார். இதற்காக அவர் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டா வந்திருந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும் வந்திருந்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.