மமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்!. தமீமுல் அன்சாரி 13
அதிரைநிருபர் குழு | Sunday, March 13, 2011 | அதிரைநிருபர் , தமீமுல்
அன்சாரி , தமுமுக ,நேர்கானல் , மமக
அரசியல் களம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிட்டு
பேசப்படும் முஸ்லீம் அரசியல் கட்சிகளில் ஒன்றான மற்றும் தமிழ்நாடு முஸ்லீம்
முன்னேற்ற கழகத்தின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்
பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் 11-மார்ச்-2011
வெள்ளிக்கிழமை காலை நம் அதிரைநிருபருக்காக அளித்த பிரத்தியோக நேர்கானல்.
இந்த நேர்கானலில் நம்முடன் ஐக்கிய அரபு அமீரக துபாய் மண்டல மர்கஸ் கிளை தலைவர்
அதிரை அஸ்ரஃப் மற்றும் துணைத் தலைவர் ஷஹீதுல்லாஹ் மற்றும் சார்ஜா மண்டல நிர்வாகிகள்
உடனிருந்தனர்.
அதிரைநிருபர்: அவசர அவசரமாக அ.தி.மு.க.வுடன் அடைக்கலம் பெற்றுள்ளதாக பரவலாக
பேசப்படுகிறதே இதனைப் பற்றி தங்களின் கருத்து என்ன ?
தமீமுல் அன்சாரி: அவசர அவசரமாக என்ற அந்தக் கேள்வியே தவறானது தேர்தல் தேதி அறிவித்த
அந்த நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டனில் அடைக்கலமாவது என்பது அவசர அவரமாக எடுத்த
முடிவாக இருக்கும், ஆனால் மனிதநேய மக்கள் கட்சி ஏழுமாதங்களுக்கு முன்பாகவே
அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி.
ஜெயலலிதாவின் அழைப்பின் பேரிலேயே அதனை ஏற்று முறையான பேச்சு வார்த்தையில்
ஈடுபட்டதனால், நிதானமாக கூட்டனியிலே நாங்கள் இணைந்தோம். எனவே அவசர அவசரமான கூட்டனி
என்பது தவறானது, இன்றைய சூழலில் அனைந்திந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்
தலைமையிலான எங்களது அணி இருந்து கொண்டிருக்கிறது. அந்த அணிதான் 200 மேற்பட்ட
தொகுதிகளில் இன்ஷா அல்லாஹ் வெற்றியை பெறும்.
அதிரைநிருபர்: எவ்வகையான நிபந்தனைகளை வைத்து மூன்று தொகுதிகளைப் பெற்றீர்கள் ?
தமீமுல் அன்சாரி: அனைந்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தில் மனிதநேய மக்கள்
கட்சி ஒரு நியாயமான தொகுதிகளைப் பெறுவதிலே பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தோம்.
ஆனால் இன்றைய அரசியல் சூழலில் ஒரு மெகாக் கூட்டனியை உருவாக்கக் கூடிய சூழல்
தமிழகத்திலே ஏற்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு தமிழகத்தின் "ஹோஸ்னி முபாரக்"காக
இருக்கக் கூடிய கலைஞர் கருணாநிதியும், மன்னராட்சிபோல தமிழகத்தில் சுரண்டிக்...
கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினரையும் அகற்றுவதுதான் எங்களுடைய முதல் செயல்
திட்டமாக இருக்கிறது. அந்த அடிப்படையில பல்வேறு பெரிய கட்சிகளெல்லாம் எங்களது
கூட்டனியில் வருகை தந்து கொண்டிருந்த காரணத்தினால், நாங்கள் ஒருசில தொகுதிகளை
குறைக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது.
குறைந்தது 15 தொகுதிகளின் பெயர்கள் பட்டியலை செல்வி ஜெயலலிதா அவர்களிடம் கொடுத்து
அதிலிருந்து 12 தொகுதிகளை நேரடியாக எங்களுக்கு வேண்டுமென்று கோறிக்கை வைத்தோம்.
அவர்கள் பேச்சு வார்த்தை குழுவினருடன் தொடர்ந்து பேசுங்கள் அவர்கள் இறுதி
செய்வார்கள் என்றும் சொன்னார்கள். அதன் பிறகு ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகள்
அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினருடைய குழுவுக்கும் மனிதநேய மக்கள்
கட்சியின் குழுவுக்கும் நடைபெற்றது. அதன் அடிப்படையிலே கடைசியாக விட்டுக் கொடுங்கள்
என்று சொல்லும்போது, ஏழு தொகுதிகள் என்று இறங்கி வந்தோம். பிறகு சூழ்நிலைகள்
மிகவும் நெருக்கடியாக இருக்கிறது பல்வேறு அமைப்புகளுக்கு கொடுப்பதாக வாக்குறுதி
அளித்திருக்கிறோம் என்று வழியுறுத்திச் சொன்னார்கள். கடைசியாக தமிழகத்திலே மூன்று
தொகுதிகளும் புதுச்சேரியிலே ஒரு தொகுதியும் தருவதாக அவர்கள் சொன்னார்கள் இதனை
ஏற்பதா வேண்டாமா என்ற பல்வேறு சிந்தனை பொறுப்பு எங்கள் மத்தியிலே ஏற்பட்டது. அந்த
நேரத்திலே மீண்டும் தனித்து போட்டியிடலாமா அல்லது மூன்றாவது அணி அமைக்கலாமா எனது
போன்ற பல்வேறு கருத்துகளை பல சகோதரர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் சமுதாயத்தில்
பெரும்பாலான சகோதர்கள், சமுதாய ஆர்வளர்கள், அரசியல் விரும்பிகள், ஜமாத்தார்கள்
வந்து கலந்து கொண்டு நீங்கள் எதிர்பார்த்த ஆறு அல்லது ஏழு எண்ணிக்கை கிடைக்காத
நிலையில், இந்த மூன்றும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஏற்றுக்
கொள்வதில் தவறில்லை காரணம் மீண்டும் தனித்து நிற்பது ஆபத்தானது. விஜயகாந்த் போன்ற
பெரிய கட்சிகளலே தனித்து நிற்கக் கூடிய நிலையில் இல்லை. எனவே அரசியல் விழிப்புணர்வு
இல்லாத இச்சமூகத்தில் இதுபோன்ற முடிவுகளை நாம் எடுப்பது தற்போது நல்லதல்ல, முதலில்
நல்ல தொடக்கமாக வைத்துக் கொண்டு அதிமுகவுடன் இணைய வேண்டுமென்றும்
வேண்டுகோள்களையும், நிர்பந்தங்களையும் அறிவுத்தல்களையும் சொன்னார்கள்.
பலநேரம் நாம் கட்சி அமைப்பை நடத்தினாலும் எந்த சமூகத்தை முன்வைத்து நாம் சமுகப் பணி
செய்கிறோமோ அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையோரின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய
ஒரு சூழ்நிலை இருக்கிறது அந்த அடிப்படியிலே இந்த மூன்று மற்றும் ஒன்று மொத்தம்
நான்கு தொகுதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதே நேரம் இந்த நான்குத் தொகுதிகளை
நீங்கள் குறைவானது என்று நினைத்து விடக் கூடாது 1991க்கு பிறகு ஒரு முஸ்லீக்
கட்சிக்கு தனி சின்னத்தில் நான்கு தொகுதிகள் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை.
இங்கே காணாமல் போன முஸ்லீம்களுடைய அரசியல் கண்ணியத்தை முதன்முறையாக்
மீட்டிருக்கின்றோம். இதில் முழு திருப்தி இல்லாவிட்டாலும் ஒரு நல்ல தொடக்கமாக
கருதுகிறோம், எதிர்காலத்திலே கூடுதல் தொகுதி என்ற இலட்சியத்தை அடைவோம்.
அதே நேரத்தில் இன்னொன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் மனிதநேய மக்கள் கட்சிகளை
விட புகழ் பெற்ற பல்வேறு கட்சிகளின் இன்றைய நிலை என்னவென்று பார்த்தோமென்று
சொன்னால் பிரபல நடிகர் சரத்குமாருடைய கட்சி தமிழகத்தில் பத்து மாவட்டங்களிலே
முழுமையான ஒருங்கினைப்பாக வைச்சிருக்காங்கன்னு சொல்லலாம் அவர்களுக்கே இரண்டு
தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. அதேமாதிரி பத்து பதினைந்து மாவட்டங்களில்
இருக்கும் டாக்டர் கிருஷ்னசாமி பிரபலமான தலைவர் பல்வேறு தேர்தல்களை சந்தித்தவர்
அவருக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலைகளை
பார்க்கும்போது மனிதநேய மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை சொந்த சின்னத்தில்
பெற்றிருப்பதும் மிகப் பெரிய ஒரு தொடக்கம் என்பதை இந்த முஸ்லீம் சமுதாயம்
பாராட்டுகிறது.
இது மட்டுமல்லாமல் இந்தச் சமுதாயத்தினுடைய பல்வேறு கோரிக்கைகளை செல்வி
ஜெயலலிதாவிடம் வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு 3.5 சதவிகித இட ஒதுக்க்கீட்டை
எதிர்காலத்தில் கூடுதலாக்குவதற்கான சட்ட முன்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற
கோரிக்கையை வைத்திருக்கின்றோம். உருது பேசக் கூடிய முஸ்லீம்கள் தமிழகத்திலே ஆறு ஏழு
மாவட்டங்களிலே பரந்து இருக்கின்றார்கள் அந்த மக்களுக்கு சமச்சீர் கல்வியில்
பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது அதை நிவர்த்தி செய்வதற்கான முன் முயற்சிகளைச் செய்ய
வேண்டும். அடுத்ததாக திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லீம்களின் தனிப்பட்ட
உரிமைகளில் சங்கடங்களும் பாதிப்புகளும் ஏற்படுத்தும் விதத்தில் தலைவர்
கருனாநிதியின் அரசால் ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ள காரணத்தினாலே அவைகளையும்
எதிர்காலத்திலே அதிமுக கழக ஆட்சி அமைந்த பிறகு சரி செய்ய வேண்டும் என்பது போன்ற
பெரிய கோரிக்கைகளையும் ஏராளமான துணைக் கோரிக்கைகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.
அவைகளையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி
அளித்திருக்கிறார்கள்.
அதிரைநிருபர்: தேர்தல் செலவுகளுக்கு கூட்டனிக் கட்சியிலிருந்து பணம் கிடைக்கிறதா?
தேர்தல் ஆனையம் பல கட்டுப் பாடுகளை விதித்துள்ளபோதும் வேறு எந்த வழிகளில் தேர்தல்
செலவுகளுக்கு பணம் திரட்டுகிறீர்கள்?
தமீமுல் அன்சாரி: நாங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக இருந்தால் அனைந்திந்திய
அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஒன்பது தொகுதியும் பாண்டிச்சேரியில் ஒரு
தொகுதியும் மொத்தம் பத்து தொகுதிகளைக் கூட கொடுத்திருப்பார்கள். தேர்தல்
செலவுகளையும் அவர்களே ஏற்றிருப்பார்கள் ஆனால் சுயமாகவும் சுதந்திரமாகவும்
செயல்படமுடியாது என்ற காரணத்தினால், எம்.எல்.ஏ.க்களாக பத்து பேரும் ஆகக் கூடிய
வாய்ப்பு இருந்தும் கூட சமுதாயத்தின் தன்மானம் மீண்டெடுக்கப் படவேண்டும் என்ற
சொந்தச் சின்னம், குறைவான தொகுதிகள் கிடைத்தாலும் பரவாயில்லை, தேர்தல் நிதி அவர்கள்
தராவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையைத்தான் எடுத்திருகின்றோம். எனவே எங்கள்
கூட்டனியிரிடம் பத்து பைசாவைக் கூட பெறவில்லை என்பதை ஊரரிந்த உண்மையரிந்த அரசியல்
அறிவரிந்த அனைவருக்கும் தெரியும்.
இரண்டாவது, இந்த தேர்தல் செலவுகளை எப்படி செய்யப் போகிறீர்கள் என்று கேட்டீர்கள்,
எங்களுடைய தாய் கழகமான த.மு.மு.க. பதினாறு ஆண்டுகளை கடந்து பதினேழாம் ஆண்டில் அடி
எடுத்து வைக்கிறது. எங்களுக்கு அம்பானிகளோ, டாட்டாக்களோ, வளைகுடாவில் இருக்கும்
பெரும் முதலாளிகளோ உதவி செய்யவில்லை, சாதாரன கூலித் தொழிலாளிகள் நடுத்தர மக்கள்
சிறு வணிகர்கள் சிறு முதலாளிகள் என்று சமுகத்தின் சாமானிய மக்கள் அளிக்கும் நிதியை
வைத்துதான் எங்களது தாய் கழகமான த.மு.மு.க.வை நடத்தி வருகிறோம் அந்த மக்களின்
நிதியைக் கொண்டுதான் இன்ஷா அல்லாஹ் தேர்தலையும் சந்திப்போம்.
அதிரைநிருபர்: போட்டியிடும் தொகுதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய
தகவல் உள்ளதா?
தமீமுல் அன்சாரி: நாங்கள் தனிநபர் சார்ந்த அமைப்பல்ல தனிநபர் துதிபாடுவதையும் தரை
மட்டமாக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரு பேரமைப்பிலிருந்து வெளியே வந்த ஒரு
அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் எங்களுடைய எந்த முடிவாக இருந்தாலும் மாநில
செயற்குழுவிலே ஆலோசனை செய்து அதன் பின்னால் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்
குழுவால் முடிவு அதை நாங்கள் அறிவிப்போம் 15ம் தேதி எங்களுடைய மாநில செயற்குழு கூடி
ஆலோசிக்கிறது 16ம் தேதி எங்களுடைய உயர்நிலைக் குழு கூடி அநேகமாக 17ம் தேதி
வேட்பாளர் பட்டியலை இன்ஷா அல்லாஹ் அறிவிப்போம்.
அதிரைநிருபர்: இறையச்சமுள்ள முஸ்லீம் ஒருவர் உங்களின் கூட்டணிக்கு எதிரணியில்
போட்டியிடுகிறார் அவரை ஒரு முஃமீன் என்று ஏன் ஆதரிக்கக்கூடாது? இங்கு உங்கள்
அரசியல் கொள்கை முக்கியமா அல்லது இஸ்லாமிய கோட்பாடு முக்கியமா?
தமீமுல் அன்சாரி: இது ஒரு சமூகப் பொறுப்புள்ள கேள்வி என்பதை நான் மறுக்கவில்லை,
கடந்த காலங்களில் நாங்கள் எப்படியெல்லாம் செயல்பட்டொம் என்பதை
புரிஞ்சுகிட்டீங்கன்னு சொன்னா இந்தக் கேள்விக்கான விடைகளை சொல்வேன். கடந்த
நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திராவிட முன்னேறக் கழகம் சார்பாக சகோதரர்
அதுர்ரஹ்மான் அவர்கள் போட்டியிட்டார்கள் அங்கேயே அப்துர்ரஹ்மானுக்கு எதிராக
வேட்பாளர்களை நிற்கவைக்கும் வாய்ப்புகள் இருந்து நாங்கள் அதனைச் செய்யாமல்
அவர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தோம். அதேபோல் தேனி பாராளுமன்றத் தொகுதியிலே சகோதரர்
ஹாருன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார்கள் அவருக்கு எதிராகவும்
வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் அவர்களையே ஆதரியுங்கள் என்றும் சொன்னோம். கடந்த
காலங்களிலே ஒரு நல்ல அனுகுமுறையை நாங்கள் பின்பற்றி இருக்கிறோம் ஆனால், வெற்றி
பெற்ற பிறகு அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களே என்று கூட அல்லாமல் சமுதாய உணர்வுடன்
நன்றி சொல்ல வேண்டும். மாறாக வெற்றி பெற்ற பிறகு எங்களுக்கு எதிரான வேலைகளையும்
எல்லா செயல் திட்டங்களையும் அறிவித்தார்கள், செயல்படுத்தினார்கள் பல இடங்களிலே.
சகோதரர் ஹாரூன் அவர்கள் சென்னையிலே நமது தொண்டர்கள் மீது வன்முறை ஏவும்
நிலையெல்லாம் ஏற்பட்டது, இதையெல்லாம் பார்கின்றபோது நமக்காக ஒருகாலாத்தில் களத்தில்
நின்று எதிர்பாராமல் வாக்களித்தார்களே ஆதரவளித்தார்களே அவர்களுக்கு எதிராக நாம
இப்படி செய்து கொண்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியும் அவர்களிடமில்லை. எனவே
இப்படிப்பட்டவர் ஒரு இருக்கும்போது நாங்கள் ஏன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற
கேள்வி எங்களுடைய ஆதரவு தரப்பிலிருந்து எழுகிறது.
இப்போ நாங்கள் அரசியல் கட்சியை உருவாக்கியிருக்கின்றோம் இப்படி நாங்கள் ஒரு முடிவை
எடுத்தால் எங்கள் கட்சியில் இருக்கக் கூடிய கூட்டனிக் கட்சியைச் சேர்ந்தவர்கள்
கூட்டனிக் கட்சியில் இருக்கக் கூடிய பல்வேறு சமூக அமைப்பினரும் என்ன செய்வார்கள்
நாம் போட்டியிடும் தொகுதியில் அவர்களின் சாதியைச் சார்ந்தவர்கள் வேட்பாளராக
போட்டியிட்டால் அவர்கள் அதேபோல் ஒரு முடிவை எடுத்தால் என்னவாகும் எனவே ஒரு முஸ்லீம்
ஒப்பந்தத்தை காப்பாற்ற வேண்டும். அந்த அடிப்படையில் கூட்டனியில் ஒரு ஒப்பந்தம்
போட்டிருக்கின்றோம் யார் எப்படியிருந்தாலும் நம்முடைய கூட்டனியில் இருக்கும்
வேட்பாளரை ஆதரவு அளிப்பது என்று வாக்குறுதி அளித்திருக்கின்றோம், ஒரு முஸ்லீம்
வாக்குறுதியை காப்பாற்றக் கூடியவனாக இருக்க வேண்டும் அந்த அடிப்படையிலே எங்களது
கூட்டனியில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் வாக்களிப்போம்
வாக்கும் சேகரிப்போம், இதில் இரட்டை வேடங்களுக்கு இடமில்லை.
அதிரைநிருபர்: ம.ம.க.போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று (இன்ஷா
அல்லாஹ்).. எதிரனியினருக்கு அதாவது தி.மு.க கூட்டனிக்கு பெரும்பான்மை பெற
தேவையிருக்கும் பட்சத்தில் உங்களது ஆதரவை கோறினால் உங்களது நிலைபாடு என்ன ?
தமீமுல் அன்சாரி: இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எங்களுடைய அனைந்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கூட்டனிதான் ஆட்சி அமைக்கப் போகிறது... தி.மு.க.
ஆட்சி அமைக்கும் என்பதை நம்புவதே ஒரு பகல் கனவு, கானல் நீர், அத்தைக்கு மீசை
முளைத்திருப்பதுபோல்.
அதிரைநிருபர்: ஒற்றுமை ஒற்றுமை என்று வாய்கிழியப் பேசும் இயக்கங்களும் சமுதாய
அமைப்புகளும் எதைச் சாதித்தன? த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வையும் சேர்த்தான்
கேட்கிறோம் ?
தமீமுல் அன்சாரி: சமுதாய ஒற்றுமை அவசியம், சமுதாய ஒற்றுமை தேவை என்ற கருத்து நமது
சமூகத்திலே அரிதுபெரும்பான்மையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அந்தக்
கருத்திலே நூறு சதவிகிதம் உடன்பாடுண்டு. ஆனால் நடைமுறையில் இந்த உலகம் இந்த ஊர்
எப்படி இருக்கிறது இங்கு கூற வேண்டும் ஒரு பதினைந்து நபர்கள் கொண்ட கூட்டுக்
குடும்பத்தை ஒற்றுமையாக வழிநடத்த முடியாத நிலைதான் இன்றைய சூழல் இருக்கிறது.
ஒரு பத்தாயிரம் இருபாதிரம் மக்களைக் கொண்ட அதிராம்பட்டினத்தில் கூட ஒரு ஐக்கிய
ஜமாத்தை நிறுவி நடத்த முடியவில்லை. அப்படியிருக்கும்போது தமிழகத்தில் ஐம்பது
இலட்சத்திற்கும் அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒரு ஊரிலே
ஐக்கிய ஜமாத்தை நிறுவுவதற்கு ஒரு போராட்டத்தை நடத்தும்போது ஐம்பது இலட்சத்திற்கும்
மேல் பரந்து விரிந்த தலைமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லீம்
சமுதாயத்தினர் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படுத்துவது என்பது ஒரு எளிதான காரியம்
அல்ல. ஆனாலும் எப்படியாவது அதனை நெருங்கி விடவேண்டும் என்று பாடுபடுகிறோம்,
அவர்களுடைய கருத்தினை ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுத்துக்
கொண்டிருக்கிறோம். அதான் நான் சொல்வது 2001லே குஜாரத்திலே கலவரம் ஏற்பட்டபோது
தமிழகத்திலே எல்லா முஸ்லீம் அமைப்புகளோடு இணைந்து ஒரே மேடையிலே கலந்து கொண்டு
எங்களது கண்டனங்களை வலியுறுத்தியிருக்கிறோம், அதே போன்று திருமண பதிவுச் சட்டத்தை
கலைஞர் கருனாநிதி அவர்களின் அரசாங்கம் கொண்டு வந்து முஸ்லீம்களுடைய
தனியுரிமைகளுக்கு எதிராக செயல்பட்டபோது அனைத்து முஸ்லீம் அமைப்புகளோடு கலந்து இது
குறித்து அமைச்சர் துரைமுருகன் அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான
அனைத்து முஸ்லீம் அமைப்புகள் அடங்கிய குழு சென்று அவர்களை சந்தித்து அதில்
திருத்தம் செய்வதற்கான முழு முயற்சியும் செய்தது. அதுவும் அடுத்து திருவிடைச்சேரி
எனும் ஊரிலே ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெற்றபோது அது ஒட்டுமொத்த முஸ்லீம்
சமுதாயத்தின் கண்ணியத்தை பாதிக்கக் கூடிய செயலாக இருக்கிற காரணத்தினாலே 19 முஸ்லீம்
அமைப்புகள் இணைந்து இது குறித்து பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளிலும் நாங்கள்
ஈடுபட்டோம்.
இப்போதும்கூட நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சகோதர அமைப்புக்களை நாங்கள் சென்று
சந்தித்து வருகிறோம். நாகர்கோவிலுக்குச் சென்று ஜாக் அமைப்பின் தலைவர் கமாலுதீன்
மதனி அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அடுத்து
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர்களை
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சந்தித்து பேசினார்கள். தொடர்ந்து பாக்கர் அவர்களுடைய
இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பிடமும் பேசியிருக்கிறோம், ஜமாத்துல் உலமா
அமைப்புடனும் பேசியிருக்கிறோம், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சந்தித்து
பேசியிருக்கிறோம் இதேபோன்று ஜமாத்தே இஸ்லாமி, ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் போன்ற சகோதர
அமைப்புகளோடு சந்தித்து பேசி அரசியலிலே ஒரு ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான
முயற்சியை எடுத்து வருகிறோம். இவைகளெல்லாம் ஒற்றுமைக்கான முயற்சியின் அடித்தளங்கள்
என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிறகு இதனை மேலும்
வலுவூட்டுவதற்கு மனிதநேய மக்கள் கட்சியும் எனது பெருமைமிகு தாய் கழகமான தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்ற கழகமும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும் இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர்: நேற்றைய தினம் பேட்டி அளித்த முஸ்லீம் லீக் மகளிர் அமைப்பு சகோதரி
ஃபாத்திமா முசாஃபர் அவர்கள் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தனது
அதிருப்தியை தெரிவித்துள்ளார் இச்சந்தர்பத்தை பயன்படுத்தி அவரை உங்கள் அணிக்கு
சேர்த்துக் கொள்ள முயற்சிப்பீர்களா?
தமீமுல் அன்சாரி: முஸ்லீம் இயக்கங்கள் எந்தக் காலத்திலும் பிளவுபடுவதை நாங்கள்
விரும்பவில்லை பல்வேறு அமைப்புகள் செயல்படலாம் அவர்கள் மத்தியிலே மாற்றுக்
கருத்துகள் இருக்கலாம் தவறு கிடையாது. ஆனாலும் முஸ்லீம் லீக் காயிதே மில்லத்
இஸ்மாயில் சாஹிப் அவர்களால் உருவாக்கப்பட்ட நீண்ட நெருங்கிய அரசியல் பாரம்பரியமிக்க
ஒரு கட்சி அந்தக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை உதயசூரியன் சின்னத்தில் கொடுத்ததே ஒரு
அவமானம் என்பது முஸ்லீம் சமுதாயத்தின் கருத்து. மூன்றைக் கொடுத்து அதில் ஒரு
தொகுதியைப் பறித்த கலைஞர் கருனாநிதியுடைய சர்வாதிகாரப் போக்கை முஸ்லீம் சமுதாயம்
கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கிறது இந்த நிலையிலே கலைஞர் கருனாநிதி முஸ்லீம்
சமுதாயத்தை எப்படியெல்லாம் கிள்ளிக் கீரையாக நினைக்கிறார் என்பதற்கு உதாரணம்.
அவரால் கொங்கு முன்னேற்றக் கழகத்திலிருந்து ஒரு தொகுதியை கூட பெற முடியவில்லை
எல்லோரும் சொல்கிறார்கள். கொங்கு முன்னேற கழகத்தின் மதிப்பு என்பது ஐந்துதான்
என்று, காங்கிரசை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கொங்கு முன்னேற்ற
கழகத்திற்கு கூடுதலாக இரண்டு தொகுதிகளை கொடுத்து ஏழு தொகுதிகளாக அதிகரிச்சு
கொடுத்திருக்காங்க, அதிலிருந்து ஒரு தொகுதியை பறித்திருக்கலாம். அல்லது திருமாவளவன்
என்பவருடைய சக்தி என்பது ஏழு அல்லது எட்டு தொகுதிகள்தான் என்பது எல்லோருக்கும்
தெரியும் அவர்களிடமிருந்தாவது ஒன்றை கேட்டுப் பெற்றிருந்திருக்கலாம். டாக்டர்
ராமதாஸுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்தார் ஸ்டாலின் அவர்கள் லண்டன் செல்வதற்கு
முன்பாக ப.ம.க.விற்கு மொத்தமே அதிகபட்சமாக இருப்பத்தி ஐந்து தொகுதிகள்தான்
தரமுடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர் லண்டனில் இருக்கும்போது கலைஞர்
கருனாநிதி காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே முப்பத்தி ஓர்
தொகுதியை கொடுத்திருக்கிறார் அவர்களிடமிருந்தாவது அந்த மூன்றை எடுத்து பெற்று
கொடுத்திருக்கலாம். ஆனால், மிக மிக குறைவாக முஸ்லீம் லீக்கிற்கு கொடுத்த மூன்றில்
ஒன்றை பறித்துக் கொண்டது மிக மிக அநியாயம் சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்களின்
குரல் ஒட்டு மொத்த முஸ்லீம் லீக் தொண்டர்களின் குரலாகத்தான் இருக்கிறது. இது பற்றி
முஸ்லீம் லீக் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். முஸ்லீம் லீக்கிற்கு இந்நிலை
ஏற்பட்டதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்திடவில்லை, வருத்ததில் இருக்கிறோம்
என்பதுதான் உண்மை.
அதிரைநிருபர்: அனைத்து முஸ்லீம்களின் வாக்குகளை ஒன்றிணைக்க வழிகள் என்ன ? எப்போது
முஸ்லீம்கள் தங்களது பலத்தைக் காட்ட வாய்ப்பு ஏற்படும் ? அதற்கு ம.ம.க.வின் செயல்
திட்டங்கள் என்ன ?
தமீமுல் அன்சாரி: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம் முஹல்லாக்களில் முஸ்லீம்
வாக்குகளின் நிலைமை பற்றி மனிதநேய மக்கள் கட்சியில் என்ன நினைக்கிறது என்பது பற்றி
அவைகளையெல்லாம் வெளிப்படையாக இப்போது விவாதிக்க முடியாது களத்தில் மிகவும் நிதானமாக
சமூக மக்களின் பேராதவோடு அதனை நாங்கள் செய்து காட்டுவோம் அந்த வாக்குகள் எங்களது
அணிக்கு வருகின்ற காரனத்தினால்தான் திராவிட முன்னேற்ற கழக தலைமியிலான அணி 70க்கும்
மேற்பட்ட தொகுதிகளில் தோற்கப்போகிறது என்பதை காலம் நிரூபிக்கும். இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர்: பிரிந்த சகோதரர்களிடம் அதாவது த.த.ஜ. சகோதரர்களிடம் சமாதானம் பேசி
சுமூகமான சூழல் உருவக்க ஏன் பகிரங்கமாக இதுவரை நீங்கள் முயற்சி செய்யவில்லை ?
இதுவரை தாங்கள் சந்தித்த அமைப்புகள் பற்றி சொன்னீர்கள் அவர்களிடமும் சமுதாய நலன்
கருதி ஒற்றுமைக் கரம் நீட்டலாமே ? கருத்து வேறுபாடுகளை தூக்கியெரிந்து, விட்டுக்
கொடுத்துதான் போனால் என்ன ? இதனை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
தமீமுல் அன்சாரி: விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை என்பது ஒரு பழமொழி.
அந்தப் பழமொழியை நாங்கள் உணர்ந்திருக்கிறோம், நாங்கள் வலைந்து போக தயராக
இருக்கிறோம், அதற்காக முதுகை ஒடித்துக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் தெரிந்து
கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலே தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்துடம் ஆழமான கருத்து
வேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை, மறுக்க முடியாது.
ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் அதை சுமூகம் செய்வதற்கான சில முயற்சிகளை நாங்கள்
செய்தும் வந்திருக்கிறோம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது மனிதநேய
மக்கள் கட்சி துவங்கப்பட்ட பிறகு எங்களது அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையான மக்கள்
உரிமையிலே பார்த்தால் அவர்கள் மீது வைத்த விமர்சனங்கள் ஒன்று அல்லது இரண்டாகத்தான்
அல்லது மூன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அவர்கள் மீதான எந்த
விமர்சனமும் செய்யாமல் நாங்கள் மவுனமாக இருந்து எங்களுடைய களத்திலே எங்களுடைய
பணிகளை செய்து வந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 2009 தேர்தல்
நடைபெறுவதற்கு முன்பாகவும் அதற்கு பின்னாலும் அவர்கள் எங்கள்மீது சுமத்திய அநியாமான
குற்றச்சாட்டுகளும் எங்களுக்கு அவர்கள் அளித்த தொந்தரவுகளும் எங்களைப் பற்றி
அவர்கள் எழுதிய கீழ்த்தரமான மூன்றாம் தர விமர்சனங்களும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது
எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள். அதையும் மீறி நாங்கள் மவுனம் சாதித்தோம், ஆனால்
அந்த மவுனத்தை பலவீனமாவர்கள் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து இவர்கள் தாக்குதல்
தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் ஓர் எல்லையுண்டு, அவர்கள் எல்லை மீறிப்
போய்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய மாநாடு ஜூலை 4ம் தேதி ஒன்று சென்னையிலே
நடைபெற்றது அந்த மாநாட்டிற்கு எதிராக எந்த வேலையும் நாங்கள் செய்யவில்லை இன்னும்
சொல்லப் போனால் எங்களிடம் சிலர் கேட்டபோது கூட அவர்கள் நடத்தினால் நல்லவிதமாக
நடத்தட்டும் என்றுதான் சொன்னோம். மறைமுகமாகக் கூட நாங்கள் தொந்தரவு செய்யவில்லை.
சகோதரர் பி.ஜே. அவர்களே ஆன்லைன் பி.ஜே.யில் குறிப்பிட்டிருந்தார்கள் என்று உங்களுகே
தெரியும் அந்த அளவுக்கு செயல்பாடுகளில் எங்களது கன்னியத்தை செயல்படுத்தினோம்.
இன்னும் சொல்லப் போனால் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஒரு பத்து
நாட்களில் சகோதரர் பி.ஜே.அவர்களை கொலை செய்வதற்காக ஒரு செயல் திட்டம் ரகசியமாக
முன்னிருத்தப்பட்டது அந்தச் செய்தி எங்களுக்குத் தெரிய வந்த பிறகு உடணடியாக
பி.ஜே.அவர்களுக்கு தெரியப்படுத்தி உரிய பாதுகாப்புகளை செய்ய வேண்டும் என்று சொல்லி
நானும் எனது தாய் கழகத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்களும்
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை நிர்வாக குழு அறிவுறுத்தலின் அடிப்படியில்
அன்றே உளவுத்துறை ஐஜியாக இருந்த சகோதரர் ஈஸ்வர மூர்த்தியை நேரில் சந்தித்து
பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்றும் சொன்னோம். காரணம் என்னவென்று
கேட்கும்போது எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
இதுபோன்ற வன்முறைகளை பயங்கரவாதங்களை ஒருபோதும் யாரும் யார்மீதும் ஏவிவிடக் கூடாது
என்று உறுதியாக இருக்கிறோம். நீங்கள் அவருக்குரிய பாதுகாப்பை கொடுங்கள் என்றும்
கேட்டுக் கொண்டோம். அந்த நேரத்திலே சகோதரர் பி.ஜே அவர்கள் பாக்கருடன் இருந்தார்கள்
எங்களுடைய பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள், பாக்கர் அவர்களை தொடர்பு கொண்டு
பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பை கொடுங்கள் அவர் வழக்கமாக இருக்குமிடத்தில் இருக்காமல்
வேறு இடத்தில் இருக்க வையுங்கள் என்றும் அறிவுறுத்தினோம். அப்படியெல்லம் நாங்கள்
எங்கள் நல்ல எண்ணத்திலே பல்வேறு கால கட்டங்களிலே நெருங்கியிருக்கிறோம்.
இன்னும் சொல்லப் போனால் 2004ம் வருடம் என்று நினைக்கிறேன் கும்பகோனத்தில் அவர் ஒரு
மாநாடு நடத்தியபோது பத்திரிக்கையலே ஊடகத்துறையிலே அந்த அமைப்பைச் சேர்ந்த
எ.எஸ்.அலாவுதீன், எம்.ஐ. சுலைமான் என்பவர்களின் பெயராலே வெடிகுண்டு கடிதங்கள்
வந்தது. இதைப் பற்றி கூட எங்களது பத்திரிக்கையிலே அந்த அமைப்புக்கும் எங்களுக்கும்
எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இத்தகைய
பங்கரவாத வன்முறையெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று உறுதிபட எங்களது மக்கள்
உரிமையிலே தெரிவித்தோம். இப்படியாக பல்வேறு காலகட்டங்கள் எங்களது நல்ல எண்ணங்களை
அவர்களிடம் தெரிவித்து வந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால்
கடந்த ரமளானிலே ஆன்லைனில் இணையதளத்திலே சகோதரர் பி.ஜே.அவர்கள் அவருடைய உயிருக்கு
ஆபத்து என்று கூறி அதற்கு த.மு.மு.க.வில் உள்ள்ச் பலரும் உடந்தை என்பது போல
எழுதியது மிகப் பெரிய கோபத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. நாங்கள் எங்களது
வேலையப் பார்த்துச் சென்று கொண்டிருந்த தருணங்களில் வீண் பழிகள் போட்டு
கொந்தளிப்பான சூழலை உருவாக்க சகோதரர் பி.ஜே.செய்தார்கள்.
அடுத்து திருவிடச்சேரி சம்பவத்திலே அவர்கள் நடந்து விதமும் அதன் பின்னால் அளித்த
தன்னிலை விளக்கவும் சமுதாய மக்களிடையே பெரிய கொந்தளிப்பைதான் ஏற்படுத்தியது. அன்றை
நிலையில் எங்களது மாற்றுக் கருத்தையும் தெரிவித்தோம் அதைகூட அவர்கள் ஜனநாயகபூர்வமாக
எடுத்துக் கொள்ளாமல் ஒரு மோசமான எதிர் எழுத்துத் தாக்குதலையும் செய்தார்கள்.
இப்போது கூட மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் போர்க் கொடி
தூக்க சபதம் செய்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில் அவர்களிடம் எப்படி நாங்கள்
பேச்சு வார்த்தை நடத்த முடியும் ? நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். கொஞ்ம் கூட
நல்லெண்ணமில்லாமல், கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல், கொஞ்சம் கூட பண்பாடு இல்லாமல்
பெருந்தன்மையில்லாமல் குர்ஆன் ஹதீஸ் பேசிக் கொண்டு இப்படிப் பட்ட சமுதயத்தை
பிளவுபடுதும் வேலைகளை செய்பவர்களிடம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதில்
நம்பிக்கையில்லை, அதனை நாங்கள் தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை சமுதாயமும்
விரும்பவில்லை. சமுதாயத்திலுள்ள 99% மக்கள் நம்மோடு இருக்கிறார்கள், அவர்களுடைய
ஆதவரவும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஓரிறைவனின் கிருபையும் எங்களுக்கு இருப்பதாக
நம்புகிறோம் அந்த நம்பிக்கையோடு வெற்றிவாகை சூடுவோம், இன்ஷா அல்லாஹ்..
அதிரைநிருபர்: கொள்கை வேறுபாடு உள்ள ஒரே காரணத்திற்காகத்தான் ம.ம.க.வை
எதிர்க்கிறோம் என்று த.த.ஜ.சகோதரர்கள் சொல்லி வருகிறார்கள், சரி அப்படி என்னதான்
கொள்கை வேறுபாடுகள் உள்ளது த.மு.மு.க.வுக்கும் த.த.ஜ.வுக்கும் ?
தமீமுல் அன்சாரி: கொள்கை வேறுபாடு என்னவென்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்
அவர்களின் கொள்கை என்ன என்பதை அவர்கள் இதுவரை தெளிவாக வெளியிடவில்லை
அபூஅப்துல்லாவோடு என்ன கொள்கை வேறுபாடு என்று அவர்கள் விளக்கவேண்டும், S. கமாலுதீன்
மதனியோடு என்ன கொள்கை வேறுபாடு என்று விளக்க வேண்டும், இதுபோன்று பல்வேறு பாக்கர்
அவர்களோடு என்ன கொள்கை வேறுபாடு என்று விளக்க வேண்டும், எல்லோரிடமும் கொள்கை
வேறுபாடுதான் காரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதைப் பற்றி ஆழமாக நான் ஆழமாக
விமர்சிக்க விரும்பவில்லை, ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன் மனசாட்சிக்குரிய
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் தேர்தலிலே மனிதநேய
மக்கள் கட்சியை தோற்கடிப்போம் என்று அவர்களுடைய தலைவர் சகோதரர் பி.ஜெயுனுலாபிதீன்
அவர்கள் செய்திருக்கக் கூடிய இந்த சபதம் உண்மையிலேயே உங்களது மனசாட்சிக்கு உடண்பாடு
உள்ளதா என்று கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள் அதாவது இணைவக்கக் கூடிய எத்தனையோ
முஸ்லீம் வேட்பாளர்களை நாங்கள் ஆதரித்து வெற்றுபெற செய்வோம் என்று சொல்லுகிறார்கள்.
முழுக்க முழுக்க எந்த கொள்கையும் இல்லாத பல்வேறு சமூகங்களை சார்ந்த வேட்பாளர்களை
வெற்றி பெற செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் எல்லா மேடைகளிலும் இறைகொள்கை
அடிப்படியிலும், தெளிவு அடிப்படையிலும், சமுதாய நலனின் அடிப்படையிலும் இணைந்து
இருக்கக் கூடிய மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களை தோர்கடிப்போம் என்பது எந்த
விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பி அவர்கள் (ததஜ சகோதரர்கள்) சரியான முடிவு
எடுவில்லை என்று சொன்னால் நிச்சயமாக நாளை மறுமையிலே அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல
கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.
அதிரைநிருபர்: நிறைவாக ஒரு கேள்வி, இதுவரை தமிழக இஸ்லாமிய கட்சிகளிடம் இல்லாத
தெளிவும் ம.ம,க.விடம் அப்படி என்னதான் இருக்கிறது ?
தமீமுல் அன்சாரி: எங்களுடைய அரசியலே மாறுபட்டதாகத்தான் இருக்கும், உதாரணத்திற்கு
தனிமனித துதிபாடலை முன் வைத்துதான் எல்லா அரசியல் கட்சிகள் செயல்படுது, ஆனால்
நாங்கள் ஒரு கூட்டுத் தலைமையை முன்வைத்து செயல்படுகிறோம். தனிநபரின் ஆளுமைகள்
வெளிப்படும் அவர்களின் திறன்கள் வெளிப்படும், ஆனால் தனிநபரின் முடிவிலே அல்லது
சார்ந்தே எங்களது கட்சி செயல்படுவது இல்லை.
இரண்டாவதாக எங்களிடம் இந்த பணக்காரர்களிடம் மண்டியிடக் கூடிய அரசியலில் நாங்கள்
ஒருபோதும் விரும்பவில்லை. இப்போதிருக்கும் முஸ்லீம் கட்சிகள் என்ன செய்கிறார்கள்
என்றால், தங்களுக்கு சீட்டு கிடைத்த உடனே யாராவது கோடீஸ்வரங்க கிட்ட அல்லது
கட்சிக்கு தொடர்பில்லாத உறுப்பினரல்லாத, கட்சித் தொடண்டர்களுக்கும் தொடர்பில்லாத
ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த தொகுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்று வாருங்கள் என்று
சொல்லக் கூடிய சூழலைதான் சமுதாயத்தில் இருக்கிறது.
ஆனால் எங்களுடைய கட்சியில அப்படியெல்லாம் இல்லை குறைந்தது மூன்றாண்டுகள்
உறுப்பினராக இருக்க வேண்டும், அவரது உழைப்பை உதாரணத்திற்கு இடஒதுக்கீட்டு
போராட்டத்தில் அவர் பங்கு பெற்றாரா, சிறைச் சாலைகளுக்குச் சென்றார்களா ? சமுதாய
பிரச்சினைகளுக்கு எத்தகைய போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்ற அளவுகோளின்
அடிப்படையில்தான் எங்களது வேட்பாளர்களை முடிவு செய்கிறோம்.
மூன்றாவது விசயம் என்னவென்றால் எங்களுடைய கட்சியிலே வேட்பாளர்கள் செலவு செய்ய
முடியாது உதாரணத்திற்கு தமிழ்நாட்டிலே மூன்றும் பாண்டிச்சேரியிலே ஒன்றும் நான்கு
தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்றால் போட்டியிடும் வேட்பாளர் ஒரு ருபாயைக் கூட
அவரது சொந்தக் காசில் செலவிடக் கூடாது என்பதை எங்களது கட்சியின் கொள்கையாக
வைத்திருக்கின்றோம். காரணம் சொந்த காசை செலவு செய்யும் போது அந்த வேட்பாளர் வெற்றி
பெற்று வரும்போது தான் செலவு செய்த காசை எடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு
முறைகேடுகளில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. பல பேர் ஊழலை ஒழிப்போம் என்று
சொல்வார்கள், ஆனால் ஊழலை ஒழிப்பதற்கான அடித்தளத்தையே நாங்கள் சரியாக செய்து
திட்டமிட்டு வருகிறோம். அந்த அடிப்படையிலே கட்சி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி
அந்த நிதியிலிருந்துதான் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகள் செய்யப்படும்.
இவைகளெல்லாம் நம் முஸ்லீம் சமுதாயத்திலே ஒரு மாறுபட்ட நல்ல அரசியலாக கருதுகிறோம்.
அடுத்ததாக இன்றைக்கு பொதுவாகவே அரசியல் என்பது இந்தியாவிலே ஆயிரம் அல்லது
ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்ப வலையங்களுக்குள் சுற்றி வரக்கூடிய அரசியலாக சுற்றி
வரக்கூடிய சூழலை பார்க்கிறோம். ஒன்று அவர்களிடம் பணம் இருக்க வேண்டும், அல்லது பழைய
பாரம்பரியம் இருக்க வேண்டும், அல்லது அரசியலிலே அவர்களது முன்னோர்கள் யாராவது
இருந்திருக்க வேண்டும். இப்படிப் பட்ட நிலையில் உள்ள குடும்பங்கள்தான் அரசியலிலே
முதன்மைபடுத்தி முன்னிலைக்கு வரக்கூடிய நிலை எல்லா அரசியல் கட்சிகளிடமும் உண்டு அது
முஸ்லீம் கட்சிகளிடமும் இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியில் மட்டும்தான் பொருளாதர
பின்னனிக்கோ, பாரம்பரிய பின்னனிக்கோ, குடும்ப பின்னனிக்கோ, குடும்ப அரசியல்
பின்னனிக்கோ இடமில்லாமல் யாரெல்லாம் சமுதாயத்திற்கா தியாகம் செய்தார்களோ,
உழைத்தார்களோ ஆற்றல் இருக்கிறது அறிவு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை
என்ற அடிப்படையிலே வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம்.
இதை எல்லாம் ஒரு மாறுபட்ட நல்ல அரசியல் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிக
முக்கியமாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நிறைய வாய்ப்புகளைத் தருகிறோம்
பெண்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறோம் ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் உணர்வுகளை
பிரதிபலிக்ககூடிய வேலையை செய்கிறோம் அதனுடைய ஒரு அம்சம் தான் தேர்தலிலே நாங்கள்
தொகுதிகளைப் பெற்ற பிறகு சமுதாயத்தில் இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புகளோடு
கலந்துரையாடி வருகிறோம் இத்தகைய முன் முயற்சிகளை கடந்த காலங்களில் வேறு எந்த
முஸ்லீம் அமைப்புகள் யாரும் செய்யவில்லை என்பதை இந்த நேரத்திலே நினைவூட்ட
கடமைபட்டிருக்கிறேன்.
எனவே ஒரு மாறுபட்ட அரசியலை, நல்ல அரசியலை, மனிதநேய அரசியலை முன்னிருத்தி, முஸ்லீம்
சமுதாயத்தின் எல்லா சகோதரர்களும் அமைப்புகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சி
வேறுபாடுகளை மறந்து நான்கு தொகுதிகளிலும் (3+1) நாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த
சமுதாயத்தின் பேராதரவை நாங்கள் கேட்கிறோம். குறிப்பாக அதிராம்பட்டினம் என்பது
தமிழகத்திலே இருக்கக் கூடிய முஸ்லீம் ஊர்களிலே முதல் ஐந்தில் பிரதானமாக இருக்கக்
கூடிய ஊர் மறுப்பதற்கில்லை அதிராம்பட்டினத்து சகோதரர்களை இந்த இணைய தளத்தின்
வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அதிராம்பட்டினம் சகோதர்கள் உலகமுழுவதும்
பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள் தங்களுடைய அந்த வாய்ப்பினை பயன்படுத்தி
எங்களுக்கான ஆதரவை தளத்தை அதிகமாக முன்னிருந்த வேண்டும் என்று இந்த அதிரைநிருபர்
வலைத்தளத்தின் வாயிலாக நான் தலைமையின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
-----
இது நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் முதல் அதிகாரப்பூர்வமான அரசியல் நேர்கானல்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இது முழுக்க முழுக்க அரசியல் உண்மை
செய்திகளை அறிந்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்கானல். இந்த நேர்கானல்
பற்றி உங்கள் அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு நேர்கானலில் சந்திக்கிறோம்.
தகவல் : அதிரை அல்மாஸ்
No comments:
Post a Comment