கடந்த புதன்கிழமை இரவு (01.12.2010) இஸ்ரேலிய வானொலிச் செய்தியறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 600 பலஸ்தீனர்கள் சுற்றிவளைத்துச் சிறைப்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் 8 பேர் ஏற்கெனவே விசாரணைக்காகத் தேடப்பட்டுவந்த நபர்களாவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பலஸ்தீனர்கள் யாவரும் தத்தமது சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்துவந்த போதிலும், அவர்கள் அங்கே தொடர்ந்து வாழ்வதற்கும் மேற்குக் கரைப் பிராந்தியங்களில் கூலிவேலைகளைச் செய்வதற்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையிடம் அனுமதிப் பத்திரம் பெறவேண்டும் என்றும் அவ்வாறில்லாத பட்சத்தில் அவர்கள் கைதுசெய்து சிறையிலடைக்கப்படுவார்கள் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையிலேயே மேற்படி பெரும் எண்ணிக்கையிலான பலஸ்தீனர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். நாற்புறமும் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் நியாயமற்ற கெடுபிடிகளில் சிக்கி அல்லலுற்றுவரும் பலஸ்தீனர்களின் அன்றாட சுமுக வாழ்வு பெரிதும் சீர்குலைந்து காணப்படுகின்றது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் இத்தகைய நியாயமற்ற கெடுபிடிகளின் விளைவாக ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகப் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment