பாஜக ஆட்சியில் சிபிஐ நிலைமை பான் மசாலாக் கடை போல் ஆகிவிட்டது என மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லாம் ஷேக் விமர்சித்துள்ளார்.
முன்னதாக நேற்று, மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் சிபிஐ விசாரணை நடத்தும்போது சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை. ஒப்புதல் இல்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர்.காவே ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பினை வழங்கியது.
இத்தீர்ப்பினை வரவேற்பதாகக் கூறியுள்ள மகாராஷ்டிர மாநில அமைச்சர் அஸ்லாம் ஷேக், சிபிஐ-யையும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாஜக ஆட்சியின் கீழ் சிபிஐ பான் மசாலாக் கடை போல் ஆகிவிட்டது.
பான் மசாலாக் கடைக்குள் யார் வேண்டுமானாலும் எளிதில் செல்லலாம். அப்படித்தான் சிபிஐ ஆட்டுவிக்கப்படுகிறது. பாஜக ஆட்சி நடக்காத மாநிலங்களுக்குப் படையெடுக்க சிபிஐ ஏவப்படுகிறது. சிபிஐ-யும் யார் மீது வேண்டுமானாலும் வழக்குப் பதிகிறது, எவரை வேண்டுமானால் கைது செய்கிறது. பாஜக ஆட்சி இல்லாத மாநில முதல்வர்களும் அமைச்சர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
அரசியல் ஆதாயத்துக்காக சிபிஐ அமைப்பு மத்திய அரசால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஆகையால் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment