
கடத்தலில் தற்போது தங்கம் போன்று மஞ்சள் இடம் பிடித்திருப்பது ஏன்..மஞ்சளுக்கு இலங்கையில் நல்ல மவுசு நிலவுவது எதனால்?
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக இலங்கைக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு அமோக வரவேற்பு உண்டு. தமிழகத்தின் தெற்கே ஒரு முணையில் அமைந்துள்ளது ராமேஸ்வரம் தீவு. கடல் வழியாக எளிதில் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதால் கடத்தல்காரர்களின் தேர்வாக இந்த தீவு பகுதி அமைந்திருக்கிறது.
கடல் வழியாக 18 கடல் மைல் தொலைவை கடந்தால் இலங்கையின் கச்சத்தீவு பகுதியை அடைந்து விட முடியும். அங்கிருந்து பொருட்களை கைமாற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதால் துணிச்சலுடன் அடிக்கடி கடத்தல் சம்பங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதே சமயம் காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் பல கடத்தல் சம்பவங்களும் முறியடிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் ஏன் இலங்கைக்கு கடத்தப்படுகிறது?
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக மஞ்சள் இறக்குமதிக்கு இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால் அங்கு மஞ்சள் வியாபாரத்தில் ஏற்பட்ட தாக்கம் தட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்தது. இந்த தட்டுப்பாடு விலையில் எதிரொலித்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ மஞ்சளின் விலை ரூ.150க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு கிலோ மஞ்சளின் விலை ரூ.1800க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெருமளவு மஞ்சள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனாலேயே சட்ட விரோத மஞ்சள் கடத்தல் அதிகரித்துள்ளது.
இந்த வரிசையில் தங்கம் உள்ளிட்ட விலையுர்ந்த பொருட்களில் தற்போது மஞ்சள் சேர்ந்துள்ளது. கடந்த காலங்களில் மஞ்சளை கிலோ கணக்கில் சேமித்து வைத்மு கொண்டு கடத்தல் திட்டம் தீட்டப்படுகிறது. அந்த வகையில் இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.60 கோடி மதிப்பிலான 2,000 கிலோ மஞ்சள் மூட்டைகளையும், நாட்டு படகையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு முன்னதாகவே ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைக் கொண்டு, அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆய்வு செய்த போது 73 மூட்டைகளில், சுமார் 2000 கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மஞ்சளையும், நாட்டுப் படகையும் பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, இது போன்ற கடத்தல்கள் வருண்குமார் எஸ்.பி.யாக இருந்த போது முறியடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் குந்துகால் பகுதியில் இருந்து இலங்கைக்கு சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான மஞ்சளை கடந்தவிருந்த கூட்டத்தை அம்மாவட்ட காவல்துறை கைது செய்தது. அதுமட்டுமல்லமல் கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. இருப்பினும் கடத்தல்காரர்களின் கவனம் மஞ்சளில் தான் இருக்கிறது.
No comments:
Post a Comment