
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
மதுரை
ஒத்தக்கடையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது
ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.
1991-1996
காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை,
நெடுஞ்சாலைத் துறை என முப்பெரும் துறைகளின் அமைச்சராக இருந்தவர் ராஜ
கண்ணப்பன். கட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். பின்னர்
அக்கட்சியில் இருந்து விலகி 2000-ம் ஆண்டில் மக்கள் தமிழ் தேசம் கட்சியைத்
தொடங்கினார். அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார்.
இளையான்குடியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
அமைச்சர்
பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ராஜ கண்ணப்பன், 2009-ம் ஆண்டு
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் சேர்ந்தார். அப்போது நடைபெற்ற
மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.
ஆனால், தோல்வி அடைந்தார். அதன்பின் 2011-ம் ஆண்டு திருப்பத்தூர்
சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட ராஜ கண்ணப்பனுக்கு ஜெயலலிதா வாய்ப்பு
வழங்கினார். அதிலும் தோல்வியடைந்தார். தொடர் தோல்விகளால் கட்சியில்
அவருக்கிருந்த முக்கியத்துவம் குறைந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப்
பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில்
சிவகங்கை அல்லது ராமநாதபுரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று
எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு 'சீட்' மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த
அவர், உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்
மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.
சமீபத்தில் செய்தியாளரைச்
சந்தித்த ராஜ கண்ணப்பன், ''எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்த சரியான
தலைவர் மு.க.ஸ்டாலின்தான். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரு
வெற்றி பெற அவரோடு இணைந்து பணியாற்றுவோம்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜ கண்ணப்பன் இன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
No comments:
Post a Comment