Latest News

  

முப்படைக்கும் ஒரே தலைமை தளபதி : இராணுவ ஆட்சிக்கு திட்டமிடுகிறதா மோடி அரசு? - திருமாவளவன் கேள்வி!

பிபின் ராவத் முப்படைகளுக்கான தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்.

அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது;
"இந்தியாவின் முப்படைக்குமான தலைமைத் தளபதி முதன்முதலாக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாடு விடுதலை பெற்ற பின்னர் இதுவரை இல்லாத ஒரு புதிய மரபை மோடி அரசு உருவாக்கியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறான இந்த நிலைப்பாடு பல்வேறு ஊகங்களுக்கும், அய்யங்களுக்கும் இடமளிப்பதாக உள்ளது.

எழுபதாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு படைக்கும் தனித்தனியே தலைமைத் தளபதிகள் தனித்து இயங்கிய நிலையில், தற்போது அம்மூன்று தலைமைத் தளபதிகளையும் ஒரு புள்ளியில் பிணைத்து ஒற்றை நபரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இராணுவத் தலைமை தளபதியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள பிபின் ராவத் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் மட்டுமே புதிதாக இப்பதவி உருவாக்கப்பட்டதா? அல்லது பா.ஜ.க அரசின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்காலத்தில் முப்படைகளின் முழு ஒத்துழைப்பையும் பெறுவதற்கு பிபின் ராவத் மட்டுமே நம்பகமானவர் என்னும் அடிப்படையில் இப்பதவி அவருக்காக உருவாக்கப்பட்டதா?
இதுவரையில் முப்படைகளுக்குமான தலைவராக குடியரசுத் தலைவர் மட்டுமே செயல்பட்டு வந்தார். தற்போது இப்புதிய பதவி உருவாக்கத்தின் மூலம் குடியரசுத் தலைவரின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. முப்படைகள் தொடர்பான விவகாரங்களில் குடியரசுத் தலைவரின் தலையீட்டை தடுக்கும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பதவியாகவே இது விளங்குகிறது.

இந்திய பாதுகாப்புத்துறை வலுவாக இருக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அரசியல் விவகாரங்களில் தலையிடும் ஒருவருக்காக அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் புதுப்பதவியை உருவாக்கி, மேலும் மூன்றாண்டு காலம் அவர் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இருக்குமென்கிற அய்யத்தை எழுப்புகிறது.
அதாவது, எதிர்காலத்தில் பா.ஜ.கவின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக, பொதுத்தேர்தலுக்கு தடைவிதித்து இராணுவ ஆட்சியைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரவும் மோடியின் தலைமையிலான சனாதன அரசு முயற்சித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.

அத்தகையதொரு சூழலில் இங்கே இராணுவ ஆட்சிக்கான தேவை எழலாம். அதற்கு முப்படைகளின் முழு ஒத்துழைப்பு தேவை. அதற்கு நம்பகமான ஒரு தலைமைத் தளபதியின் கட்டுப்பாட்டில் முப்படைகளும் இயங்கவேண்டியது தேவையாகும். இத்தகைய ஊகங்களுக்கெல்லாம் மோடி அரசின் இந்த முடிவு இடமளிக்கிறது. பா.ஜ.கவின் ஃபாசிச ஆட்சியில் இங்கே எதுவும் நடக்கலாம். அதனை எதிர்கொள்ளும் துணிச்சல் மட்டுமே தற்போது நமக்கான தேவையாக உள்ளது. " என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.