
சென்னை: எம்.ஜி.ஆர், மூதாட்டிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த போது வாங்க மறுத்து, உனக்கு அம்மான்னா உசுராமே, தாய், தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன, வச்சுக்கோ, ஆண்டவன் கொடுக்குறது போதும், என்றார் அந்த மூதாட்டி இதைக் கேட்ட மக்கள் திலகம் வாயடைத்துப் போனார்.
எம்.ஜி.ஆர் ஒரு முற்றுப் பெறாத புத்தகம் தான். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட, பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகும். அவரைப் பற்றி எத்தனையோ வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வந்தபோதும், அந்த புத்தகங்களில் இல்லாத, ஏதாவது ஒரு சுவராஸ்யமான விசயத்தை யாராவது தினசரி சொல்லிக்கொண்டும், அது பற்றிய செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அன்றாட வாடிக்கைதான். அது மாதிரி தான் இன்றைக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஒரு செய்தி. அதை நம்முடைய ஃபிலிமி பீட் வாசகர்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.
என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க, ஹீரோன்னு சொல்றீங்க, மாஸ்னு சொல்றீங்க, அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் எம்.ஜி.ஆர். எப்படி இதை சொல்கிறார்கள் ரசிகர்கள்.
ஜெயந்தி பிக்சர்ஸின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம். அந்தப் படத்தின் 100வது நாள் விழா சேலத்தில் நடந்தது, மக்கள் திலகமும் வந்திருந்தார். சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி, ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம்.
படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள். அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம், என்று சொல்ல, மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார்.
வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல், அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் எம்.ஜி.ஆர்.
நான் விதவையாகி 30 வருஷம் ஓடிப்போச்சு, பிள்ளைங்க இருந்தும் இல்லை என்ற நிலை தான். கீரை வித்து வயித்தை கழுவுரேன். அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும். அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் என்றார்
எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் என்று மக்கள் திலகம் வினவ, உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா. அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பாக்குறேன். அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டபடி ஆடுவாங்க. எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே, என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா, என்றார்.
அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா, நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க, என்றார் மக்கள் திலகம்.
யப்பா, உனக்கு அம்மான்னா உசுராமே, தாய், தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன, வச்சுக்கோ, ஆண்டவன் கொடுக்குறது போதும், என்றார் அந்த மூதாட்டி இதைக் கேட்ட மக்கள் திலகம் வாயடைத்துப் போனார்.
உடனே, சுருக்கம் விழுந்த அந்த மூதாட்டியின் கையை மக்கள் திலகம் முத்தமிட்ட பொழுது அரங்கமே அதிர்ந்தது.
இப்பே சொல்லுங்க, அவர் தானைய்யா எவர்க்ரீன் மாஸ் ஹீரோ. இப்படி ஒரு ஹீரோ நிஜ ஹீரோ தமிழ்நாட்டில் இருந்தார் என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை தானே.
source: filmibeat.com
No comments:
Post a Comment