Latest News

  

`ஹெல்மெட்டுடன் வந்த 7 பேர்; அலறி ஓடிய மாணவன்!' - கல்லூரி அருகில் கொல்லப்பட்ட பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் அபிமணி என்ற திலீப். இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார் அபிமணி. மதிய உணவு சாப்பிடுவதற்காக 1 மணி அளவில் அவரது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
Murder
செய்துங்கநல்லூரிலிருந்து சிவந்திபட்டி ரோட்டில் உள்ள ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது, ஹெல்மட் அணிந்து கொண்டு 3 பைக்கில் வந்த 7 பேர் அவரை வழி மறித்தனர். அக்கும்பலைப் பார்த்ததும் பைக்கை கீழே போட்டுவிட்டு காட்டுப்பகுதிக்குள் பயந்து ஓடினார் அபிமணி. கையில் அரிவாள்களுடன் துரத்தி அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். கழுத்துப் பகுதியில் ஆழமாக வெட்டுபட்ட அபிமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கல்லுரி அருகில் கொலை நடந்ததால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தோம். கடந்த ஏப்ரல் மாதம், இதே ஊரைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் தீலிப்பின் தாத்தா ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் காளிதாசன் என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள சுடலைமாடசுவாமி கோயில் திருவிழாவின் வரவு செலவு கணக்கு காட்டுவதில் தகராறு வந்துள்ளது. இதில் காமராஜை ஒரு கும்பல் வெட்டியது. இந்த வழக்கில் காளிதாசன் மகன் பொன்ராஜ், கொலை செய்யப்பட்ட அபிமணி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். காமராஜின் கொலைச் சம்பவத்திற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இக்கொலைச் சம்பவத்தில் காமராஜின் சகோதரர் குமார் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். அபிமணியின் தாயார் பொன்ராணி அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவருக்கு வளர்மதி என்ற தங்கையும், கண்ணன் என்ற தம்பியும் உள்ளனர்.
Crime spot
கடந்த மூன்று மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலைகளின் பட்டியலில் இது 20வது கொலையாகும். இதுகுறித்து எஸ்.பி.அருண் பாலகோபாலன் கூறுகையில், ``தூத்துக்குடி மாவடத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச் செயல்கள், கொலைகளை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 200 வாகனங்களில் போலீஸ் ரோந்து இரவு பகலாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பழைய குற்றவாளிகளின் நடமாட்டம் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகிறது. இதில் உள் பகையால் ஏற்படும் கொலைகளையும் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்லூரி மாணவர் கொலை சம்பந்தப்பட்ட கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றார். கல்லூரி அருகில் பட்டப்பகலில் நடந்த இக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.