
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ளும் அனைத்து அரசு
விழாக்களிலும் இனிமேல் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும்
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின்
நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள்
தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தனது கல்லூரி
மாணவிகளை பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் ஈடுபட்டதன்
விளைவாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த விசாரணையில், ஆளுநர் தானாகவே முன் வந்து பேட்டியளிப்பது
மேலும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் விசாரணைக்கு உள்ளாக
வேண்டிய ஆளுநரே தானாக முன்வந்து ஒரு விசாரணை குழுவை அமைப்பது உண்மைகளை மூடி
மறைப்பதற்கான ஒரு நடவடிக்கை என கருத, வேண்டி உள்ளது.
எனவே ஆளுநர்
பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இப்பிரச்சினையில் ஆளுநர் நியமித்துள்ள விசாரணைக் கமிஷனை ரத்து செய்ய
வேண்டும். உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், உயர்மட்ட புலன்
விசாரணைக்குழு அதிகாரிகளை நியமித்து, விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என
வலியுறுத்தி வரும் 25ம் தேதி காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்
நடைபெறும்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற
உறுப்பினருமான சவுந்தரராசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தினை
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.
மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள் கலந்து
கொள்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கவர்னர் அரசு
நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: oneindia.com
No comments:
Post a Comment