
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தடையைமீறி
இளைஞர்கள், குடும்பத்துடன் சென்னை மெரினா கடற்கரையில் கூடி போராட்டம்
நடத்தத் தொடங்கியுள்ளனர்.
தமிழகம்
மற்றும் கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு தொடர்பான நடுவர்
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 16-ம் தேதி
அன்று, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, 6 வாரக் காலத்துக்குள் காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுமீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக
அரசு இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
முன்னதாக, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கோரியும் தீர்ப்பு வெளியான
பிப்ரவரி மாதம் 16-ம் தேதி முதல் 3 மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசு
உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில்,
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னை
மெரினாவில் இளைஞர்கள், குடும்பத்துடன் கூடி போராட்டம் நடத்தத்
தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசுக்கு எதிரான
வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியுள்ளனர். ஜல்லிக்கட்டு
போராட்டத்துக்குப் பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத்
தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை
அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில்
கூடியுள்ளனர். `அமைத்திடு அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு வேளாண் நிலங்களை காத்திடு, பிச்சைக்
கேட்கவில்லை உரிமையைத்தான் கேட்கிறோம், வாரியம் இல்லையா வரியும் இல்லை
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியத்துக்காகப் போராட்டம் நடத்த இளைஞர்கள்
கூடுவதாகத் தகவல் வெளியானது. அந்தத் தகவலையடுத்து மெரினா கடற்கரையில்
போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment