2003-ம் ஆண்டு. மனிலாவில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் கிரேட் 1
ஜூனியர் டென்னிஸ் பிரிவில் விளையாடினார் 15 வயது தாரா ஐயர். அப்போது
அவருக்கு எதிராக சானியா மிர்சா விளையாடினார்.
அந்நிய மண்ணில் இந்திய
சிறுமிகள் இருவர் இறுதிப் போட்டியில் மோதிய சரித்திர சாதனை அன்று
நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து கிராண்ட்ஸ் ஸ்லாமை நோக்கிய கனவில் இருந்தார்
தாரா.
ஆனால் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட முழங்கால் காயம், அடிவயிற்றில் ஏற்பட்ட
கீறல், மூளை அறுவை சிகிச்சை, தொடர்ச்சியான முழங்கை சிகிச்சைகள் தாராவின்
டென்னிஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
அதைத் தொடர்ந்து
படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் தாரா. வட கரோலினாவின் டியூக்
பல்கலைக் கழகத்தில் படிக்கத் தொடங்கினார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்
பொருளாதாரத்தில் முனைவர் படிப்பில் இணைந்தார்.
5 வருடக் கடின உழைப்பு
மற்றும் வியத்தகு முயற்சிக்குப் பிறகு இந்தியப் பெண் தாரா தற்போது, வெள்ளை
மாளிகையில் அமெரிக்க அதிபரின் பொருளாதார ஆலோசகர்கள் சபையில்
இணைந்துள்ளார்.
இதுகுறித்துப் பெருமகிழ்வுடன் பேசுகிறார் தாரா ஐயர்.
''நான்
இப்போது தொழில்முறை பொருளாதார நிபுணர். என்னுடைய புதிய கேரியரை
ரசிக்கிறேன். நிதியக் கொள்கை, பெருநிலைப் பொருளாதாரம் (மேக்ரோஎகனாமிக்ஸ்)
மற்றும் சர்வதேச நிதி ஆகியவற்றைக் கையாளுகிறேன்.
’மற்ற துறைகளிலும் ஜொலிக்கலாம்’
தொழில்முறையில்
விளையாடும் பலர், மற்ற துறைகளிலும் பிரகாசிக்க முடியும். விளையாட்டைத்
தொடரக் கூறி அவர்களை ஊக்கப்படுத்தும் நாம், மற்ற துறைகளிலும் அவர்கள்
சிறந்துவிளங்க முடியும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
என்னுடைய குடும்பம் அப்படித்தான் இருந்தது. அவர்களின் வேலைகளைக் கூட விட்டுவிட்டு என்னுடன், என் வெற்றிக்காகப் பயணித்தனர்.
டென்னிஸ்
எப்போதும் என் வாழ்வில் பிணைந்திருக்கும். அதுதான் எனக்கு எல்லையில்லாத
நம்பிக்கையை அளித்தது. குறிப்பாக இளம்பெண்ணாக இருக்கும்போது உதவியது.
டென்னிஸ் இல்லாமல், இந்த நிலையில் இன்று நான் இல்லை. விளையாட்டில்
ஈடுபடாமல் இருந்திருந்தால் இப்போது இருக்கும் அர்ப்பணிப்பும், கவனமும்
இருந்திருக்காது'' என்று புன்னகைக்கிறார் சர்வதேச பொருளாதார நிபுணர் தாரா.
தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி
No comments:
Post a Comment