Latest News

தவறான தகவல்களை கூறும் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: மன்மோகன் சிங் வலியுறுத்தல்

பாகிஸ்தான் அதிகாரிகளை, நானும், பிறரும் ரகசியமாக சந்தித்து குஜராத் தேர்தல் தொடர்பாக பேசியதாக பிரதமர் மோடி தவறான தகவல்களை கூறியுள்ளார், இதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தில் 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பாலன்பூரில் பாஜக சார்பில் நேற்று (ஞாயிறு) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ‘‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்’’ என பேசினார்.

இதுபற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘‘மணிசங்கர் அய்யர் வீட்டில் நடந்த கூட்டத்தில் குஜராத் தேர்தலை பற்றி பேசவில்லை. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாரும் இதுபற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் உறவு பற்றிதான் அந்த கூட்டத்தில் பேசப்பட்டது. அரசு பணி ஆற்றும் பொறுப்பான அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் யாரும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அல்ல. அவர்களது பட்டியலையும் இதனுடன் இணைத்துள்ளேன்.

தேசவிரோத செயல்பாடுகளை ஆதரித்து பேசவில்லை. ஆனால் இந்த கூட்டத்தில் குஜராத் தேர்தல் பற்றி பேசப்பட்டதாக, தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தவறான தகவல்களை கூறுகிறார். நாட்டின் உயர் பதவியில் அமர்ந்து இருக்கும் பிரதமர் இதுபோன்று பேசுவது வேதனையளிக்கிறது. குஜராத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தாலும், விரக்தியாலும் அவர் இவ்வாறு பேசியுள்ளார். தவறான தகவல்களை கூறியதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் பிரதமர் மோடி அதற்குரிய பொறுப்புடனும், முதிர்ச்சியுடனும் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கிறேன். தேசியத்தை பற்றி காங்கிரஸ் கட்சிக்கு, பிரதமரும் அவரது கட்சியினரும் உரை நிகழ்த்த வேண்டாம்.

தீவிரவாத எதிர்ப்பு விஷயத்தில் அவர்கள் சமரசம் செய்து கொண்டதை அனைவரும் அறிவர். குர்தாஸ்பூர் மற்றும் உதம்பூர் தாக்குதலுக்கு பின், பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகளாக நான் செய்துள்ள பணிகளை பற்றி நாட்டு மக்கள் அறிவார்கள்.. தங்கள் அரசியல் லாபத்திற்காக பிரதமர் மோடி உள்ளிட்டோர் இதை கேள்வி கேட்க வேண்டாம்’’ என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.