சாமித்தோப்பு பகுதியில் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார் அன்புமணி.
ஒக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய
அரசு மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் பாமக இளைஞரணித் தலைவர்
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு, வரிப்பணத்தை
வீணாக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்துவிட்டு, மீட்புப்
பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அன்புமணி இன்று
நேரில் பார்வையிட்டார். சுசீந்திரம் அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியில்
சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்த அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண
உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
''மழைநீர் சூழ்ந்த இடங்களில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாததால் தொற்றுநோய்
பரவும் ஆபத்து இருக்கிறது. இதனைத் தடுக்க உடனடியாக மின்சாரம், தூய்மையான
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு வழங்க வேண்டும். குமரி
மாவட்டத்துக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 25 கோடி ரூபாய் நிதியுதவி போதாது.
முதல்வர் பழனிசாமி உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து
மழையால் உயிரையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க
வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு
விழாக்களை ரத்து செய்துவிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை
சீரமைப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறினார்.
இதைத்தொடர்ந்து
பல்வேறு இடங்களில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த
அன்புமணி, அவர்களுக்குத் தேவையான ரொட்டி, போர்வை, மருந்துப் பொருட்கள்
உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
No comments:
Post a Comment