Latest News

கந்துவட்டி கொடுமையை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது

கந்துவட்டி கொடுமையை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தென்காசி அருகே காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சாருண்யா, அட்சய பரணிகா ஆகியோருடன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்தார்.

நான்கு உயிர்கள் தீயில் கருகிய பரிதாபம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த சம்பவத்தை முன்வைத்து மாவட்ட நிர்வாகம் குறித்தும், அரசின் நிர்வாகம் குறித்தும் கார்ட்டூனிஸ்ட் பாலா விமர்சன கார்ட்டூன் வரைந்து இணையதளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இன்று கார்ட்டூனிஸ்ட் பாலாவை சென்னை போரூரில் உள்ளா அவரது இல்லத்தில் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம், பத்திரிகையாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைதைக் கண்டித்து திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.